Tuesday, November 06, 2007

பக்குரித்தல்


எனக்கு
விழுப்புண் பட்டு
நீண்ட நாட்களாகிறது.

விழுந்து புண் பட்டதுதான்
விழுப்புண் என்பதாகும்.

சேற்றிலாட முடியாமல்
வளர்ந்ததால்
சிரங்கு வரும் வாய்ப்பில்லை!

செருப்பில்லாமல் நடந்ததில்லை
என்பதால்
சேற்றுப்புண்ணுக்கும் வழியில்லை!

மிதிவண்டி பழகியதில்
தொடங்குகிறது எனது
விழுப்புண் வரலாறு!

வாடகைக்கு எடுத்த
வண்டியில் விழுந்தபோதும்
விருந்தினர் கொணர்ந்த
வண்டி ஓட்டி விழுந்தபோதும்

என் சிராய்ப்புகளுக்கு
மருந்து போடுகையில்
'புதுப்புது மொழிகளை
உருவாக்கி உளறியதாய்'
அண்ணன் சொல்லிச்
சிரித்தபோது
ஆறிவந்த தடத்தின்
பக்குகளை உரித்தபடி
பொருமிக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஜான்டிரோட்ஸ் போல
பாய்ந்து பிடிக்கிறேன் என
ஆர்வக்கோளாறில்
விழுந்து எழுந்தபோது
வழிந்த குருதி துடைத்தபடி
வீடு நோக்கி நடந்திருக்கிறேன்.

காயம்பட்ட இடத்தில்
களிம்பு தடவிப்பின்
காத்திருந்து தடவிப் பார்க்கையில்
இடறுகின்ற பக்குகளை
மெதுவாய் உரிப்பதொரு...
சுகம்!

வெங்காயத் தோல்களாய்
விரியும் அடுக்குகளுக்குள்
வடுக்களாய் ஒளிந்திருக்கிறது
காலம்!

காயாத பகுதிவரை
கிழிப்பதில் வேண்டும்
தனிக்கவனம்!

விழுப்புண்கள்
குழிப்புண்கள் ஆகிவிடாதிருக்க
தேவை எச்சரிக்கை!

உதடுகளின் உலர்ந்த
தோலை
உரிப்பதிலிருந்து...
பிறந்த குழந்தைத் தலையில்
மெல்லிய சீப்பால் சீவி
பக்குரிப்பது வரை
காயம்படாமல்
உரிப்பது ஒரு கலை...

விளையாட்டு ஓய்ந்த பிறகும்
வண்டி ஓட்டத் தெரிந்த பிறகும்
விழுப்புண்கள் வருவதில்லை!
வெகுநீண்ட காலத்துக்குப் பிறகு
விழுப்புண் பெறும் வாய்ப்பு
அண்மையில்!

புதிய விழுப்புண்களை
வரவேற்றன
பழையவை!

விரைவில்
வடுவாகிவிடுவாய் என
ஆறுதல் சொல்லின!

எண்ணிப் பார்த்தேன்..
தொண்ணூற்றாறு விழுப்புண் பெற்ற
விஜயாலனை விஞ்ச
இன்னும்
முப்பத்தாறு பாக்கியிருக்கிறது!

3 மறுமொழிகள்:

said...

அறுபது விழுப்புண்களா ?? சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதிலும், ஓட்டுவதிலுமாகவா ?? ம்ம்ம். புண்களைட்ஷ் தடவித் தடவி உதிர்ந்த தோல்களை ( பக்குகளை ??) உரிப்பதில் உள்ள சுகம் சிறு வயதில் வேறு கிடையாது. அச்சுகத்தைச் சொல்கையிலே ஒரு அருமையான தத்துவமும் கூடவே வருகிறது.

//வெங்காயத் தோல்களாய்
விரியும் அடுக்குகளுக்குள்
வடுக்களாய் ஒளிந்திருக்கிறது
காலம்!//

அருமை அருமை. வாழ்த்துகள்

said...

அருமையாக இருக்கிறது!

said...

நன்றி சீனா & குசும்பன்!