திரையுலகில் நாயகனாக வாழ்க்கையைத் தொடங்கி, அரசியலில் காமெடியனாக பரிணமித்து, இன்று பரிதாபத்திற்குரியவராகக் காட்சியளிக்கிறார் விஜயகாந்த். கொள்கைத் தெளிவோ, அரசியல் புரிதலோ இல்லாமல் கேப்பில் கட்சி தொடங்கிய கேப்10, திரைப்படங்களில் இயக்குநர்கள் சொல்படி நடித்ததைப் போல, மனைவி, மச்சானின் இயக்கத்தில் அரசியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்பார்ப்பு இல்லாத காலத்தில், கேப்டன் பிரபாகரன் என்று படத்துக்கும், தன் பிள்ளைக்கும் பெயர் வைத்த விஜயகாந்த், அரசியல் கட்சி ஆரம்பித்த பின் ஈழத்தமிழர் பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது காங்கிரசைக் கண்டிக்கவோ, குறைந்தபட்சம் ’ஆங்’ என்று அவர் ஸ்டைலில் கண்ணடிக்கவோ கூட செய்யவில்லை. காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் தயவை எதிர்பார்த்து நின்றது. இதனால் அப்போதே தமிழர்கள் இவரின் வீராதிவீரத்தைப் புரிந்துகொண்டார்கள்.
சென்னை, சேலம் என மாநாடு என்ற பெயரில் இவர் அடித்த கூத்து பத்தாது என ஊர் ஊராய் சென்று தன் ’புகழைப்’ பரப்பி வருகிறார். மக்களுடனும் (இதய)தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று இப்போது களம் இறங்கியிருக்கும் பிரச்சாரத்தில், விஜயகாந்தின் காமெடி காட்சிகள் அவருடைய முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகம் விரும்பப்படுகின்றன.
வைகோ இல்லாத இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்து களமிறக்கிய அதிமுக அணி, காற்றிறங்கிய பலூன் போல இவர் ஆகிவிட்டதைக் கண்டு தலையிலடித்துக் கொண்டிருக்கிறது.
”தொப்புளில் விடாமல் பம்பரத்தை வேறு எங்கே விடுவது?” என்று ஆபாசமாகப் பேசுகிறார் தாம்பரத்தில்...
வேட்பாளர் பெயரை மாற்றிச் சொல்லி, பின்னர் அதைத் திருத்தியவரை கும்மாங்குத்து குத்தி தனது ஆக்ஷன் ஹீரோ இமேஜைத் தக்க வைக்கிறார் தர்மபுரியில்...
எம்.ஜி.ஆர். கட்சியுடன் தான் கூட்டணி, அண்ணா ஆவி கனவில் வந்து சொன்னதால் தான் கூட்டணி என்று ஜெகன்மோகினி வேலையெல்லாம் காட்டுகிறார் அம்பத்தூரில்...
கூட்டணிக் கட்சியினரின் கொடியை இறக்கச் சொல்லிக் கத்தி, விரட்டப்படுகிறார் அரியலூரில்...
”நான் வெயில்ல பிரச்சாரம் செய்கிறேன்.. மற்றவங்க அப்படியா?” என்று ஏசியில் அமர்ந்து பிரச்சாரம் செய்யும் தனது கூட்டணித் தலைவர் ஜெயலலிதாவையே (அதை ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை) குறிவைக்கிறார். “ ஹே மாட... இந்தா நீ கருப்... ம்ம்ம்... அந்தக் கட்சிக்கெல்லாம் ஆப்பு அடிக்கணும்னா ஆஃப் அடிக்கணும்” என்று குளறுகிறார் திண்டுக்கல் தர்மத்துப் பட்டியில்...
கூட்டணியில் யார் இருக்கிறார் என்று கூடப் புரியாத அளவிற்கு மப்பு தலைக்கேறி, ’அண்ணா தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயிலில் இருக்கிறார்’ என்று கிண்டல் செய்கிறார் நெல்லை-ராதாபுரத்தில்...
இப்படி தொடர்ச்சியான உளறல்களைப் பார்த்து ஊரே நகைக்கிறது. ஆதித்யா, சிரிப்பொலி சேனல்களைவிட கேப்டன் டி.வி-யில் விஜயகாந்தின் காமெடியைப் பார்க்க நிறைய பேர் விரும்புகின்றனர். தன் பேச்சைக் கேட்கக் கூடியிருக்கும் மக்களை மடையர்களாக நினைத்து, என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாமல் பேத்திக் கொண்டிருக்கிறாரே என்று கோபம் ஒரு பக்கம்.
இவர் அடிக்கும் கூத்துகள் அதிமுக அணியின் மீதும் இவரது நாக்கமூக்க கட்சியின் மீதும் மக்களுக்கு போதுமான வெறுப்புணர்ச்சியை ஊட்டிவிட்டது. அது தி.மு.க அணிக்கும் பயனாகிறது. எனவே இன்னும் பல இடங்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூட நான் விரும்பினேன்.
ஆனால் நெல்லை ராதாபுரத்தில் “அண்ணா தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜா ஜெயிலில் இருக்கிறார். அண்ணா தி.மு.கவின் கொள்கை ஜெயில்” என்று உளறிக் கொண்டிருந்தபோது, வேனுக்குள் இருந்த யாரோ ஒரு நபர் வேட்டியைப் பிடித்து இழுத்து, தவறைச் சுட்டிக் காட்டியதும், “நான் ஏதோ தப்புத் தப்பா சொல்லிக்கிட்டிருக்கேன்னு நினைக்கிறேன். இந்த சத்தம்...” என்று நாக்கைத் துருத்திக் கொண்டு கையை ஓங்குகிற காட்சியைப் பார்த்ததும் உண்மையிலேயே விஜயகாந்தின் மீது பரிதாப உணர்ச்சி கலந்த பெரும் சங்கடம் தான் என் மனதில் எழுந்தது. (சிறு வயதில் அவரது திரைப்படங்களும், அதில் வெளிப்பட்ட தமிழ் உணர்வும் என்னைக் கவர்ந்தவை என்ற காரணத்தால் அது இன்னும் அதிகமாகியது.)
தன்னிலை மறந்து திரியும் ஒருவரை மேடையேற்றி, அவரது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்துவதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் அதன் மூலம் பலன் அனுபவிக்க நினைக்கும் இந்த அவலத்தை என்னவென்பது? சாலையில் ஆதரவற்றுத் திரியும் கால்நடைகளுக்குக் கூட வதைத் தடுப்புச் சட்டமெல்லாம் இருக்கிற போது, இதற்காக தேர்தல் ஆணையம் எதுவும் செய்யாதா?
பிரச்சாரத்திற்கென வேறு ஆட்கள் இல்லாமல், விஜயகாந்தின் முகத்தைக் காட்டி ஓட்டு வாங்க வேண்டிய நிலையில் இருக்கும் தே.மு.தி.கவினர் தங்கள் தலைவரின் மானம் பறிபோவதைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படியாவது அவரைப் பயன்படுத்தத் துடிக்கின்றனரே! மனைவி, மச்சான் என எல்லோரும் அவரைச் சுற்றி பலன் அனுபவிக்கத் துடிக்கும் நிலையில் இருக்கின்றனரே தவிர, அவரது மானத்தைக் காக்கும் முயற்சியோ, அவரைக் கட்டுப்படுத்தும் முயற்சியோ எடுக்கப்படாதது மனிதாபிமானமற்ற ஒன்றாகும்.
வயதைப் பொருட்படுத்தாமல் கலைஞர் உழைக்கிறார் என்றதும் பேனாவைத் தூக்கிப் பரிதாபப்பட்ட ஞாநி போன்றோர் இதைப் பற்றி எல்லாம் எழுதமாட்டார்கள் போலும். வயது காரணமாக தடுமாறுவோருக்கும், போதை காரணமாக தடுமாறுவோருக்கும் நமது பரிவில் வேறுபாடு உண்டுதானே!
தண்ணியடித்துவிட்டு, விஜயகாந்த் அடிக்கிற கூத்தை மக்களுக்குப் போட்டுக் காட்டுவது இவர்களின் நாயகன், ரட்சகன் (படங்கள் அல்ல) பிம்பத்தை நொறுக்குகிற செயல் தான்! அதை இந்த தேர்தல் நேரத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எறிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்.
எனது இந்தக் கருத்தில் எந்தவித அரசியலோ, உள்நோக்கமோ இல்லை. மக்கள் முன் சுயமரியாதையை இழந்து கொண்டிருக்கும் சக மனிதனைப் பற்றிய கவலையே இதை எழுதச் செய்தது.
தேமுதிக-வினரே! பாவம்!விட்டுவிடுங்கள் விஜயகாந்தை...!
கருத்துகள்
மூப்புக்கு இரங்கிய நீஙகள்
மப்புக்கு ஏன் ஏறவில்லை?
------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப்- 2011)
parithaaba paduvathai thavira vaeru vazhi illai
parithaaba paduvathai thavira vaeru vazhi illai