முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

380 கோடி செலவு! - அப்படித்தான் செய்வோம் போங்கடா!

“ஈழத்தமிழர்கள் செத்து மடிந்த வேளையில் செம்மொழி மாநாடா?”
”உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கிறோம்”

சொன்னார்கள். ஒப்புக் கொள்ள முடியவில்லை; புரிந்துகொள்கிறோம். அவர்களுக்குப் புரிந்தது அவ்வளவுதான்.

”சொரணையற்றவர்கள் தான் செம்மறி மாநாட்டுக்குப் போவார்கள்” என்றார்கள். செம்மொழியாம் எம்மொழியை செம்மறி என்று சொல்ல தமிழின் பேராலேயே அவர்களுக்குத் துணிவிருப்பதையும், அவலை நினைத்து உரலை இடிப்பதுபோலும், குளத்தோடு கோபித்துக் கொண்டு.. கழுவாமல் போவதைப் போலும் திரிவதைப் பெருமையென எண்ணும் மூடத்தனத்தையும் எண்ணி நகைக்கவில்லை.. வருந்தினோம்.

தமிழன்னைக்கு எடுக்கும் விழாவில் கலந்துகொண்டால் அந்த’ம்மா’வின் கோபத்திற்காளாக வேண்டியிருக்குமே என்று கலந்துகொள்வதைத் தவிர்த்து வீராவேச அறிக்கை விட்டவர்களின் கூட்டணிப் பயத்தை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

எழுச்சியான தமிழர் கூட்டத்தை நெறியாக அரசியல்படுத்தாமல், உணர்ச்சியை தூண்டினால் போதும் என்று அரசியல் 'கட்சி'யாக்கி, ஏறி வந்த ஏணியை உதைப்பார் போலும், ஓட்டை ஓடத்தில் பயணம் போவார் போலும், அடிமரத்தை வெட்டும் நுனிமரம் ஏறினார் போல் தமிழுணர்வை மக்களுக்கு உண்டாக்கி, தமிழியக்கமாக விளங்கும் திராவிடர் இயக்கத்தை, திராவிடச் சிந்தனையை தமிழுக்கு எதிராய்ச் சுட்டிக் காட்டி, பெரியாரியத்தை ஒழிக்க எண்ணும் ’குண’விபீஷணர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகிய ஏமாளித் தனத்தை எண்ணி எக்காளமிடவில்லை; வழி மாற்றுகிறார்களே வருங்காலத் தலைமுறையை என்று மருகினோம்.

‘அய்ந்து நாட்களுக்கு செய்தித்தாள் பார்க்கப்போவதில்லை. செம்மொழி மாநாட்டின் சிறப்பைப் பார்த்து வயிறு எரியப்போவதில்லை’ என்று கண்ணை மூடிக் கொண்ட பூனைகளைப் பார்த்து புன்முறுவல் பூக்கவில்லை. எதற்காக இத்தனைக் காலம் காத்திருந்தோமோ, அதை, அந்த அரிய வாய்ப்பை நழுவ விடுகிறார்களே என்றும் தான் கவலை கொண்டோம்.

ஏப்ரல் 1-இல் மைப்பேனாவோடு அலையும் சில்லுண்டிகளைப் போல எப்போதும் துரோகி முத்திரையைக் கையில் ஏந்தியபடி யார் முதுகில் துரோகிப் பட்டம் குத்துவது என்று திரியும் கூட்டம் செம்மொழி மாநாட்டை ஆதரிப்போர் எல்லாம் துரோகிகள் என்று இருப்புத் தீர்க்கும் விற்பனை (stock clearance sales) போல் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் குத்தித் தீர்த்தார்கள்.

கடைசியில் எந்த ஈழப் பிரச்சினையைக் காட்டி கலைஞரை எதிர்ப்பதற்காகவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை எதிர்க்கிறோம் என்று சொன்னார்களோ. அதே ஈழப்பிரச்சினைக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பயனுள்ள வகையில் பங்காற்ற வேண்டும்; செம்மொழி மாநாடு தமிழின் செழுமைக்கும் உதவும்; என்றும் எங்கள் ஆதரவு மாநாட்டுக்கு, தமிழ் வளர்ச்சிக்கு உண்டு என்று திட்டவட்டமாக புலிகளின் தலைமை அலுவலகமும் அறிவிக்க, அதற்கு கலைஞரும் அலுவலகப்பூர்வமாக நன்றியும் பாராட்டும் தெரிவிக்க புலிகளுக்கும் துரோக முத்திரை குத்துவார்களோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

தேவைப்பட்டால் தலைவர் பிரபாகரனுக்கும் துரோகி முத்திரை குத்திவிடுவார்கள் போலும் ஈழப்பிரச்சினையின் பிராண்ட் அம்பாசிடர்கள்.

என்ன செய்வது? என்ன கத்தியும் வேலைக்கு ஆகவில்லை. வயிற்றெரிச்சல்காரகள்; வகையற்றோர்; வழிமாறிப்போனோர் எல்லாம் வயிற்றில் குத்திக் கொண்டு அமர்ந்திருப்பதாக அறிகிறோம்.

”நான் வரவில்லை; இது துரோக மாநாடு; புறக்கணிக்கிறோம்; குறுக்க நிற்கிறோம்” என்று குதித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனிய வெற்றிகரமாக நடக்கிறது மாநாடு!

”நான் வரவில்லை; நடக்கப்போவது தி.மு.க மாநாடு!” என்றார்கள். வான்புகழ் கொண்ட வள்ளுவன் உருவம் தாங்கிய கொடி தவிர வேறு பறக்கவில்லை.
ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வுரைகள்; லட்சக் கணக்கில் தமிழர் கூட்டம்; விழியெல்லாம் மகிழ்ச்சி. வழியெல்லாம் துள்ளல். துளியும் இல்லை தயக்கம். குடும்பத்தோடு குவிந்து கொண்டாடித் தீர்க்கிற் கோவைச் சொந்தங்கள்.

தமிழர் பண்பாட்டை, வரலாற்றை விளக்கும் கண்காட்சி பார்க்க கிலோமீட்டர் கணக்கில் கூட்டம். வெற்றி, வெற்றி வெற்றி என்று கொட்டு முரசே! மாநாடு வெற்றி என்று கொட்டு முரசே! என்று ஆடித் தீர்க்க ஆவல்... ஒரு புறம் இருக்கட்டும்..

இத்தனையும் நடக்கின்ற வேளையில் தான் எதில் நோண்டியாவது குறை கண்டுவிடமுடியுமா? என்று துளாவியபடி இருந்தன பார்ப்பன ஊடகங்கள்.

மாநாட்டுக்கு வராமல் செவிகளையும், கண்களையும் இறுக்க மூடிவிட்டு, செல்பேசியிலும் இணையத்திலும் அமர்ந்தபடி, குறுந்தகவல் அனுப்புவதும், அதைப் பலருக்கும் பரப்புவதுமாக சிலர் இருக்கிறார்கள்..

”தமிழ்ச்செம்மொழியானால் பிரியாணி கிடைக்குமா?” என்று கேட்ட துக்ளக், தினமலர் பார்ப்பனக் கூட்டத்தின் குரல் வேறு விதமாக தமிழர் தொண்டைகளிலிருந்து ஒலிக்கிறது இப்போதும் எண்ணத்தைத் தூண்டிவிட்டுவிட்டு, கிருஷ்ணமூர்த்திகள் செம்மொழி மாநாட்டுக்கு வந்துவிட்டார்கள். நம் தமிழர்கள் தான் குறுஞ்செய்தி அனுப்பி குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்னும் பெருஞ்செய்திக்கு முன் இந்தக் குறுஞ்செய்திகளெல்லாம் காணாமல் போயின. ஆயினும், எனக்கு தமிழுணர்வாளர் என்று அறிமுகமான சிலரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி தான் உண்மையில் கோபத்தை மூட்டியது.

”மக்கள் வரிப்பணத்தில் 380 கோடியை வீணடிப்பதா?” என்றும், ”ரஜினி ’அருணாசலம்’ படத்தில் 30 நாளில் 30 கோடி செலவு செய்தார்; கருணாநிதி 5 நாளில் 380 கோடி செலவு செய்தார்” கேட்ட குறுஞ்செய்திகள் பார்ப்பனர்களிடமிருந்து வரவில்லை; அவர்கள் குரல் தான் குறுஞ்செய்தியாக தமிழர்களிடமிருந்து, தமிழுணர்வு என்று கூறுவோரிடமிருந்தும் வந்தது.

கலைஞர் நடத்தும் ஒரே காரணத்திற்காக ஈழப்பிரச்சினையைக் காட்டி இதை ஒழித்துவிடலாம் என்று கருதியவர்களுக்குக் கரிபூசியது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையகம் விடுத்த அறிக்கை. அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த குயுக்தியாளர்களுக்குக் கிடைத்தது தான் இந்தக் குறுஞ்செய்தியின் கரு.

தமிழுக்குச் செலவு செய்வதா? தமிழ் வளர்ந்தால் பசி போய்விடுமா?  தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் வறுமை ஒழிந்து விடுமா? செம்மொழி என்று அறிவிப்பு வந்தால் வயிறு நிறையுமா? என்று கேட்ட பார்ப்பனர்களின் அடுத்த கேள்வியாக இருந்தது ”மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?” என்பது.
செத்த மொழி சமஸ்கிருதத்திற்கென்று 4000 கோடி செலவு செய்யும் போது மக்கள் வரிப்பணம் என்று எந்தப் பார்ப்பானும் கேட்கவில்லை.

கோடி கோடியாய்க் கோயில்களுக்குக் கொட்டியழுதபோதும், குடம்குடமாய் நெய்யும், பாலும் வீணடித்தபோதும், வாய் திறக்காதவர்களெல்லாம் இன்று எம் அன்னைத் தமிழுக்குச் மாநாடு என்றதும் வரிப்பணத்தை வீணடிப்பதா? என்கிறார்கள். அதை கேடு கெட்ட என் தமிழனும் பரப்புகிறான். திடீர் திடீரென்று யார்யார் மீதெல்லாம் அக்கறை முளைக்கிறது?!

வெட்கமாயில்லை? உலகெங்கும் உள்ள தமிழர்களை ஓரிடத்தில் கூட்டி, தமிழர்கள் இணைவதற்கான வாய்ப்பை ஒரு தமிழன் உருவாக்கித் தருகிறான். தமிழின் பெயராலேயே அதை கூறுகெட்ட தமிழன் எதிர்க்கிறான்.

எந்த கார்த்திகேசு சிவத்தம்பியை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று ஜெயலலிதா திருப்பி அனுப்பினாரோ, அதே கார்த்திகேசு சிவத்தம்பியை ஈழத்திலிருந்து வரவைத்து தொடக்கவிழாவில் அமர்த்தி, ஆய்வரங்கத்தைத் தொடங்க வைத்து அழகுபார்க்கிறார் கலைஞர்.

இது அரசியல் மாநாடாகத்தான் நடக்கும் என்று ஆருடம் சொன்னவர்களுக்குத் தன் செயலால் தக்க பதில் தந்திருக்கிறார் கலைஞர். திலீபனையும், மில்லரையும், ஈழத்தமிழர் பிரச்சினையையும், மாநாட்டு மேடையில் செய்தியாக்கியிருக்கிறார் கலைஞர்.

ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பு நிகழ்ந்து, தமிழர்கள் இனி என்ன செய்வது எனக் கவலை கொண்டிருந்த நேரத்தில் தான் கலைஞர், தமிழர்களின் ஒற்றுமையைக் காட்ட, உலகிற்கு இந்தச் செய்தியை எடுத்துச் செல்ல மிகுந்த அறிவாற்றலோடு உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்தார். ஆனால் எந்தக் காரணத்திற்காக அவர் மனதில் இந்த எண்ணம் பூத்ததோ, அதே தமிழர் ஒற்றுமைக்கு தமிழின் பெயராலேயே தருக்கர்கள் நசுக்கப்பார்த்தார்கள்.

பதினான்கு ஆண்டு காலம் உலகத் தமிழ் மாநாடு நடத்த ஒரு இம்மியைக் கூட நகர்த்தாத நொபுருக்கள் எல்லாம் ஆய்வாளர்களுக்குக் காலம் வேண்டும் என்று கடத்தப் பார்த்தார்கள். இன்று அவர் சொன்ன அதே ஆய்வாளர்கள் கோவையில் திரண்டு தங்கள் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு நொபுருக்களைத் தவிர அத்தனை ஆய்வாளர்களும், அறிஞர்களும் தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

தமிழுக்கு மாநாடு நடத்த ஒரு தமிழன், அதுவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு
ஜப்பானியரின் அனுமதிக்குக் காத்திருக்கவேண்டும். அவர் மறுத்தால் நடத்தக்கூடாது என்றால், அதையும் சில சுயநல தமிழுணர்வு வேடதாரிகள் ஆதரிக்கிறார்கள் என்றால்...

அய்யகோ தமிழா இதுதான் உன் நிலையா என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது.

”தமிழன் என்றோர் இனம் உண்டு- தனியே
அவர்க்கொரு குணம் உண்டு” என்று நாமக்கல்லார் இதைத்தான் குறிப்பிடுகிறாரோ என்று ஆசிரியர் வீரமணி அடிக்கடிக் குறிப்பிடுவார். அதையே தான் இப்போதும் கேட்கத் தோன்றுகிறது..

இதோ.... வெற்றிகரமான இந்த மாநாட்டின் இறுதி அமர்விற்கு நிறைவு விழாவிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். இது முடிவல்ல... தொடக்கம்... ஒழிந்தான் தமிழன் என்று கொக்கரித்தவர்களுக்கு... பதிலாக லட்சக்கணக்கில் திரண்ட எம் தமிழினத்தின் ஒற்றுமை இன்னுமொரு முறை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வளரும் தலைமுறைக்கு தமிழ் குறித்த விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தோறும் செம்மொழி மாநாட்டுக்கு சிறப்பு விழாக்கள், போட்டிகள் என்று மாணவர்களுக்கு உத்வேகத்தை ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது. ஊரெங்கும் தமிழின் சிறப்பை பேச வைத்திருக்கிறார்கள்... தமிழர்களின் தொன்மையை, கலை, பண்பாட்டைக் கண்காட்சியாகப் பார்த்திருக்கும் அடுத்த தலைமுறைக்கு என் தமிழை எடுத்துச் சென்றிருக்கிறோம். அவர்கள் வளர்வார்கள்... வளர்ப்பார்கள்...

அதற்கு 380 கோடியென்ன? இன்னும் கொட்டிக் கொட்டி செலவழிக்கலாம்..... அப்படித்தான் செய்வோம். போங்கடா!

(பின் குறிப்பு: கடும் கோபத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, பல முறை திருத்தி
எழுதப்பட்டிருக்கிறது.  கோபத்தில் இதன் தரம் தாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகஇதில் வந்த வார்த்தைகள் பல நீக்கப்பட்டிருக்கின்றன.)

கருத்துகள்

-/பெயரிலி. இவ்வாறு கூறியுள்ளார்…
எவ்வளவுதான் சப்பிக்கட்டுக்கட்டுவீர்கள். புலிகள் அறிவித்தால், புலிகளும் கருணாநிதியின் கசட்டுக்கும்பலே என்பதிலே ஏதும் தவறில்லை.
-/பெயரிலி. இவ்வாறு கூறியுள்ளார்…
http://meenakam.com/wp-content/uploads/2010/01/mahinda_thiruma_kani_trbalu.jpg

http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/11/rajapaksa_and_indian_delegation.jpg

சுயமரியாதை?
-/பெயரிலி. இவ்வாறு கூறியுள்ளார்…
/
”தமிழ்ச்செம்மொழியானால் பிரியாணி கிடைக்குமா?” என்று கேட்ட துக்ளக், தினமலர் பார்ப்பனக் கூட்டத்தின் குரல் வேறு விதமாக தமிழர் தொண்டைகளிலிருந்து ஒலிக்கிறது இப்போதும் எண்ணத்தைத் தூண்டிவிட்டுவிட்டு, கிருஷ்ணமூர்த்திகள் செம்மொழி மாநாட்டுக்கு வந்துவிட்டார்கள்./

அட அட
எப்படியெல்லம் நியாயப்படுத்துவீர்கள். அப்படியானால், இவர்களெல்லாம் இப்போது தமிழர்கள் நேசர்கள்... பார்ப்பனர்கள் அல்லர்... அப்படித்தானே? என்னே பகுத்தறிவு!!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இவனுங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாதுங்க.....

எவனாச்சும் செண்டிமெண்ட்டா பேசினா இலையை கூட சுலையா ஏத்துகிறவனுங்க.... விட்டுத்தள்ளுங்க....

வாழ்க தமிழ்! வளர்க கலைஞர்
கொண்டோடி இவ்வாறு கூறியுள்ளார்…
புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்த அறிவித்தலை முழுதாகப் படித்தீர்களா?

அதிலே மாநாடாட்டைப் புறக்கணிப்பவர்களை நியாயப்படுத்தித்தான் எழுதப்பட்டுள்ளது. சும்மா தமக்குச்சாரப்பாக, புலிகள் வாழ்த்தினார்கள், ஆதரவளித்தார்கள் என்று கருணாநிதியும் அவர்படையும் ஒற்றைவரியைத் தூக்கிப்பிடித்துத் தமக்குத் தாமே துதிபாடிக்கொண்டுள்ளது.
ARIVUMANI, LISBON இவ்வாறு கூறியுள்ளார்…
கொண்டோடி அந்த அறிக்கையை நீங்கள் மீண்டும் ஒருமுறை திரும்ப படிப்பது நல்லது.

ஆதரவு என்று இல்லாமல் வேறென்ன இருக்கிறது. அது தமிழக அரசுக்கும் அஞ்சலாக அனுப்பப் பட்டிருக்கிறது.
ARIVUMANI, LISBON இவ்வாறு கூறியுள்ளார்…
நெத்திப் பொட்டில் ஆணி அடித்தாற் போல் ஒரு சிறந்த கட்டுரை!!

அற்புதம்!! அற்புதம் !!
vizhivendhan இவ்வாறு கூறியுள்ளார்…
///////செத்த மொழி சமஸ்கிருதத்திற்கென்று 4000 கோடி செலவு செய்யும் போது மக்கள் வரிப்பணம் என்று எந்தப் பார்ப்பானும் கேட்கவில்லை.

கோடி கோடியாய்க் கோயில்களுக்குக் கொட்டியழுதபோதும், குடம்குடமாய் நெய்யும், பாலும் வீணடித்தபோதும், வாய் திறக்காதவர்களெல்லாம் இன்று எம் அன்னைத் தமிழுக்குச் மாநாடு என்றதும் வரிப்பணத்தை வீணடிப்பதா? என்கிறார்கள். அதை கேடு கெட்ட என் தமிழனும் பரப்புகிறான். திடீர் திடீரென்று யார்யார் மீதெல்லாம் அக்கறை முளைக்கிறது?!
/////////

சபாஷ், சரியான சவுக்கடி
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நேரடியாக ரூ.68.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக ரூ.243 கோடி செலவிடப்பட்டுள்ளது.//

என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
தமிழ்ப்பறை இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல மரியாதைக்குரியத் தலைப்பில் நிறைய செய்திகளைச்சொல்லியுள்ளீர்கள்.பொதுவாகவே உங்கள் கட்டுரைகளில் மின்சாரத்தின் தாக்கம் தெரிகிறது. ஒரு ஆவனப்பட இயக்குனரிடமிருந்து இப்படியான ஒரு நியாய கட்டுரை எதிர்பாராதது.என்ன செய்வது வண்டியில் பூட்டப்பட்ட குதிரைகளுக்குப் பக்கப்பார்வை இருக்கக் கூடாதல்லவா?
பெரியார் தந்த புத்தியே போதும் என்கின்றபோது, பெரியார் மொழி குறித்து என்ன சொன்னார்? ஏன் சொன்னார்? எதற்காகச் சொன்னார்?
என்பதையெல்லாம் யோசிக்க வேண்டியுள்ளதே தோழரே!இதிலே புலியெல்லாம் வேண்டாம்.( புலிகள் ஆதரவு என்ற உங்கள் ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும்?) மொழி குறித்தும்,அந்த மொழிபேசும் இனம் குறித்து மட்டுமே யோசியுங்களேன் !
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மாநாட்டில் அடித்த ஜால்ரா பத்தாது என்று இன்னும் ஜால்ரா. ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
மாநாட்டில் அடித்த ஜால்ரா பத்தாது என்று இன்னும் ஜால்ரா. ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு ஜ்ஜங்கு ஜ்ஜிங்கு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam