முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு என்றும் உண்டு! - புலிகள் அறிக்கை

தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------

தலைமைச் செயலகம்,
தழிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
15-06-2010

தலைவர்/துணைத்தலைவர்கள்,
தலைமைக்குழு,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,
தமிழ்நாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 – 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.

1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண்மீட்புக்கானதும் மொழிக்காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட்கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத்தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர். குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகளைக்கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் “தமிழ்ப்பெயர்க் கையேடு – மக்கட்பெயர் 46,000″ என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது. இது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

மொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு. தம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் “இருப்போடு” தொடர்புபட்டது என்றவகையில், தமிழ்மொழியைப் பேசும் ஓர் இனக்குழுமத்தின் இருப்பை உறுதிசெய்வது அனைவரினதும் கடமையாகும். ஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக்கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு. இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.

அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
---------------------------------------------------------------------------------------------------------
வரவேற்கத் தக்க இந்த அறிக்கையை தமிழர்கள் ஊன்றிப் படிப்பார்களாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam