Sunday, July 29, 2007

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.

ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.


பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையிலேயே திருப்பி, மீண்டும் வண்டி பாலத்தருகே வந்தது. பிறகு மீண்டும் திரும்பி வண்டி தொடர்வண்டி நிலையம் சென்றது.

'அய்யா ஏன் இப்படி செய்தார்?' என்று தொண்டர்களுக்கு ஒரே சந்தேகம். அய்யாவிடம் கேட்கின்றனர். பெரியார் விளக்கம் சொன்னார்: "நாம் பாலத்தைக்கடக்கும் போது என் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. அது நல்ல புது செருப்பு. ஆனால் ஒன்று தான் வீசப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு நானும் ஒன்றும் செய்ய முடியாது. இன்னொரு செருப்பை மட்டும் வைத்துக் கொண்டு வீசியவரும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன். மீண்டும் போனபோது, அந்த இன்னொரு செருப்பையும் வீசிவிட்டார். இதோ இப்போது ஒரு ஜோடி செருப்புக் கிடைத்துவிட்டது". அவர்தான் பெரியார். அப்போது பெரியாரை வழியனுப்பச் சென்றவர்களில் அன்று 11 வயதுச் சிறுவனான (இன்றைய திராவிடர்கழகத் தலைவர்) கி.வீரமணியும், பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் ஒருவரான கவிஞர் கருணானந்தமும் முக்கியமானவர்கள்.

ஆண்டு 1972: ஆகஸ்ட் 13-ஆம் நாள் அதே மஞ்சைநகர் பகுதியில் மாபெரும் மக்கள்திரள். அன்றறய தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் சி.பி.சிற்றரசு தலைமையில், தந்தை பெரியார் அவர்களும் பங்கேற்க, (அன்றைக்கும்) தமிழக முதல்வர் கலைஞர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி.

எந்த இடத்தில் பெரியாரின் மீது பாம்பும், செருப்பும் வீசப்பட்டதோ, அதே கடிலம் பாலத்தருகே எழுப்பப்படிருந்த பெரியார் சிலையைத் திறக்கின்ற விழாதான் அது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் உடனிருந்த ஆசிரியர் வீரமணி வரவேற்புரையாற்ற, அய்யா, சி.பி.சி, கலைஞர் ஆகியோர் உரையாற்ற, அன்பில் தர்மலிங்கம், ப.உ.சண்முகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்க விழா சிறப்பாக நடைபெற்றது. முதல்வர் கலைஞர் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தார். சிலையின் பீடத்தில் இரண்டு நிகழ்ச்சிகளையும் குறிக்கின்ற கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது.

இரண்டு நிகழ்விலும் பங்கேற்ற இன்னொருவரான கவிஞர் கருணானந்தம் இது குறித்து எழுதிய வரிதான்...

"செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்"

செருப்பு வீசப்பட்ட பெரியாருக்கு மட்டுமல்ல, அதைவிடக் கடுமையாக 'அர்ச்சனை' செய்யப்பட்ட அவர் கொள்கைகள் இன்று சிறப்புடன் அரங்கேறி வருகின்றன; சட்டமாகின்றன என்பது தான் வரலாற்றுக் குறிப்பு!

யதார்த்தமாக, என்னிடம் உள்ள தந்தை பெரியாரின் பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் கடலூர் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா படங்கள் பார்வையில் பட்டன.

அந்தக் கல்வெட்டு சொன்ன சேதிதான் மேலே நான் விரிவாகக் குறிப்பிட்டது.

கல்வெட்டு சொன்ன தேதி.
1944 ஜூலை 29


குறிப்பு: புகைப்படங்களைப் பார்த்த வியப்பில் இந்தக்கட்டுரையை எழுதத் தொடங்கியது 29-ஜூலை2007 இரவு மணி எட்டு. மிகச்சரியாக 63-ஆண்டுக்குமுன் நடந்த இந்த நிகழ்வுக்கான ஆதாரங்களை எடுத்து எழுதி முடித்தது ஜூலை 30 காலை.

நன்றி: 1. 'தந்தை பெரியார்' - காவியக்கவிஞர் கருணானந்தம்
2. 'உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு': பாகம்-2 - தமிழர் தலைவர் கி.வீரமணி

Thursday, July 26, 2007

தொடரும் திரிபுகள்! - தப்பிக்குமா விக்கிபீடியா?

ஊடகங்களை ஆக்கிரமத்திருந்த பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மட்டுமின்றி, அதன் தலைவர்களது வாழ்க்கை வரலாற்றையும் திரித்து, மறைத்து வெளியிடுவதில் செவ்வனே செயலாற்றி வந்தன. அத்தகைய ஊடகங்களை நம்பிப் படித்துவந்த நம் மக்களும் இதூதான் உண்மை என்றெண்ணி தவறான செய்திகளை மேலும் பரப்பினர்.

அப்படி, தந்தை பெரியாரின் கருத்துகளை வெட்டி, ஒட்டி, முன் பின் சேர்த்து, அவர் சொன்ன கருத்தை அந்தக் காலத்தோடு பொருத்திப் பார்க்கவிடாமல் தவறான பொருள்படும்படி வெளியிடுவதில் தினமலர், துக்ளக் உள்ளிட்டவற்றிற்கு பெரும்பங்கு உண்டு.

அவ்வப்போது சில்லறைப் பொய்களைக் கசியவிட்டு, அதன் மூலமும் சுகம் காணும் அவர்களின் வாடிக்கை. பூணூலைக் கொண்டு முதுகு சொறிவதைவிட அண்மைக் காலமாக இதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. இத்தகைய கும்பல் தான் முதலில் இனையத்தைக் கைப்பற்றி, தவறான செய்திகளை வெளியிட்டுவந்தது.

விக்கிபீடியா தளம் பொதுவானதும், ஒப்பன் சோர்ஸ் தன்மையிலானதும் என்பதால், அதில் புகுந்து கொண்டு தந்தை பெரியார் வரலாற்றில் கை வைக்கும் வேலையையும் அவர்கள் மிக்க சிரத்தையுடன் செய்து வருகிறார்கள். 2004-இல் ஒரு சிறிய அறிமுகமாக இரண்டு வரிகளில் இடம்பெற்றிருந்த பெரியாரின் வரலாற்றுப் பக்கத்தப் பார்த்ததும், உடனடியாக அதில் மேலதிக தகவல்களை இணைத்தேன். மேலும் பெரியார் தொடர்பான உரிய சுட்டிகளையும் இணைப்புக் கொடுத்தேன். அதன் பின் அவ்வப்போது பார்க்கும்போது தகவல்கள் மாறியிருக்கும், புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றில் சரியான தகவல்கள் இணைக்கப்படும்போது மகிழ்வோமேயானால், அடுத்த சில தினங்களில் ஏறுக்கு மாறாய் பெரியாரை கொச்சைப்படுத்தும் படி வரலாறு திரிக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆடு, புலி ஆட்டம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

முதலில் 2004-ல் நல்லதொரு அறிமுகத்தை வெறும் பார்வையாளனாக இருந்து தந்து, பின்னர் விக்கிபீடியாவின் உறுப்பினராகி அதன் மூலமும் செயல்பட்டோம். நம் நண்பர்கள் பலரும் இவ்வாறு திருத்தங்களை அவ்வப்போது சுட்டிக் காட்டியும், மேற்கொண்டும் வந்திருக்கிறார்கள்.

இந்த மூன்றாண்டுகளில் இரண்டாண்டு போராட்ட வரலாறு இங்கே காணக்கிடைக்கிறது. எத்தனை முறை எத்தனை பேரால் மாற்றப்பட்டிருக்கிறது என்பதை இதைப் பார்த்தால் தெரிந்துகொள்ளமுடியும்.
பெரியாரை வெறும் இந்து மத எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவும், வன்முறையாளராகவும் காட்டி பொய்த் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியதைப் பார்த்து, மீண்டும் இந்த ஆடுபுலி ஆட்டத்திற்கு தயாரானபோது, "இந்தக் கட்டுரை தொடர்பாக அடிக்கடி விவாதம் எழுதுவதால், திருத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது" என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தொடர்ந்து வரும் விவாதத்தில் பங்கெடுக்குமாறு வேண்டுகோளும் விடப்பட்டிருக்கிறது. முழுமையான, முற்றிலும் சரியான ஆதரங்களோடு உள்ள தகவல்கள் நம்மிடம் இருந்தும் அவற்ரை சரிசெய்யமுடியாத நிலை உள்ளது.

தன் இறுதிநாள் வரை ஜாதி எதிர்ப்பாளராக வாழ்ந்த பெரியாரை - 'ஈ.வே.ராமசாமி நாய்க்கர்' என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இன்றும் பெரியாரை இப்படி கொச்சைப்படுத்தும் இந்தப் பாங்கு, தினமலர், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றோருக்கு இருக்கிறது. அந்தத் திரிபு வாதிகள் கூட்டத்தின் இன்னொரு பணிதான் இது.

பெரியார் (Periyar) என்பது 'பெரியாறு' (Periyar river) ஆற்றைக் குறிப்பதால் பெரியார் என்ற பெயர் ஈ.வெ.ராமசாமி என்று மாற்றப்பட்டிருப்பதாக விவாதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. "பெரியார் என்ற சொல் தந்தை பெரியாரைத் தான் அடையாளப் படுத்துகிறது; காந்திக்கு இணையாக அரசால் அவர் போற்றப்படுவதை பாருங்கள்" என்று இணைப்போடு ஒருவர் எழுதியிருக்கிறார். இன்னும் பெரியார் நாய்க்கராகவே அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறார்.

வழக்கமான பல்லவிகளான, "அவர் இந்து மதத்தை மட்டும் எதிர்த்தார்" "அவர் பார்ப்பன எதிரி..." என்றெல்லாம் புலம்புவதோடு வன்முறை இயக்கமாக திராவிடர் கழகத்தைக் காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ராஜாஜியைக் கொல்ல தி.க.வினர் சதி செய்ததாகக் கூறுகிறது ஒரு செய்தி.

//Later, in regards to a DK member's attempt to assassinate Rajagopalachari, he "expressed his abhorrence of violence as a means of settling political differences".//

//EVR's followers have broken temple icons, cut sacred threads and tufts from Brahmin priests, and have often portrayed Brahmins in the most derogatory manner in their meetings and magazines (see http://www.viduthalai.com/ and http://www.unmaionline.com/ - both in Tamil language).//

இன்னும் ஏராளமான புரட்டுச் செய்திகளோடு, வேறு யாரும் மாற்றம் செய்யமுடியாதபடி தடுக்கப்பட்ட பக்கமாக இருக்கிறது 'பெரியார்' பற்றிய விக்கி பக்கம்.

விக்கிபீடியாவின் தமிழகக்குழுவின் மூலம் இதைத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தோழர்கள், தொடர்புள்ளவர்கள் தகவல் தரவும்.
எவ்வளவு செய்ய முடியுமோ, அதைச் செய்யலாம். யாராவது தொடர்புடையோரைக் கொண்டு அவற்றை மாற்றலாம். திரிபுவாதங்கள் நிரம்பி இருந்தால் விக்கிபீடியாவின் நம்பகத் தன்மை அடிபடும்.

சரியான தகவல்கள் periyar.org தளத்தில் கிடைக்கிறது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

திரிபுகளைத் தடுக்க திராவிடரே திரள்வீர்! குரல் எழுப்புவீர்!

தினமலர் - கருமாதிப் பத்திரிகை- பெயர்க்காரணம்

தினமலர் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் கூடவே கருமாதிப் பத்திரிகை என்று தமிழுணர்வாளர்கள் பயன்படுத்தும் சொல்லும் வரும். அதென்ன கருமாதிப் பத்திரிகை என்று கேட்கிறார்கள் நண்பர்கள். எண்பதின் இறுதிகளில் ஈழப்பிரச்சினை, யுத்தம் என தீப்பிடித்துக்கொண்டு இருந்த நேரம்.


தமிழர்க்கு கிடைத்த அரும்பெரும் தலைவனாக, தமிழர் வீர வரலாற்றின் மீள்வடிவமாக எழுந்த தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் அன்றுமுதல் இன்று வரை ஈழப்போராட்டத்தில் தமிழர் விரோத தகவல்களைப் பரப்பிவரும் தினமலர் அன்றைக்கும் தன் பணியை செவ்வனே செய்து வந்தது. தமிழர்க்கென்று ஒரு நாடு அமைவதையும், தமிழரின் கொடி உலக அரங்கில் பறப்பதையும், நாடோடிக் கூட்டமான பார்ப்பனர்களால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? தமிழக இளைஞர்களும் ஈழப்போராட்டத்தின் காரணமாக எழுச்சியோடு இருந்த நேரமல்லவா?

அப்போது, யுத்தம் ஒன்றில் தலைவர் 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று செய்தி வெளியிட்டது. கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பார்ப்பனர்கள் பூணூல் சொறிந்து சுகம் காண பிரபாகரனையா இழுப்பது? என்று தமிழர்கள் கொந்தளித்தனர். தமிழர் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தும், எந்தப் பத்திரிகையிலும் வராத அந்த செய்தியை அனைவரும் மறுத்தபோதும் மன்னிப்போ மறுப்போ தெரிவிக்கவில்லை.

மேலும் தொடர்ந்து "இன்று எட்டு" "இன்று கருமாதி" "இன்று 16-ஆம் நாள் சடங்கு" என்றெல்லாம் செய்தி வெளிட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது. தமிழர்கள் இந்தச் செய்தியை நம்பிக் குழப்பம் அடைய வேண்டாம் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நாங்கள் எங்கள் ஊரில் சுவரொட்டி அடித்து ஒட்டியிருக்கிறோம்.

இப்படி, கருமாதி செய்தியை வெளியிட்ட காரணத்தால் தான் அதற்கு கருமாதிப் பத்திரிகை என்று பெயர் வந்தது.

இன்று "பிரபாகரன் போருக்குத் திட்டமிடுகிறார்". "அவருக்கு எதிர்ப்பு" என்றெல்லாம் எழுதும் அதே இதழ் இன்று வரை தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வரலாறு. என்னே அறிவு நாணயம்! பத்திரிகா தர்மம்! ஒருவேளை இப்போது பிரபாகரனின் ஆவிதான் போர்செய்கிறது என்று தினமலர் கருதுகிறது போலும்.

தினமலர் பற்றிய முந்தைய பதிவுகள்:

Monday, July 23, 2007

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி!

தினமலர் குறித்து நான் எழுதியிருந்த பதிவுக்கு அண்மையில் நண்பர் 'நாட்டு நடப்பு' அவர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள்!

//NAATTU_NADAPPU said...
வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது?ஒரு பத்திரிகையின் வாசகர் என்பவர் தனது கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க பத்திரிகையின் உதவியை நாடுகிறார். அதை வெளியிடுவது அந்த பத்திரிகையின் தர்மம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையின் வாசகராக இருக்கலாம். ஒரே கருத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பி இருக்கலாம். உடனே அதை பத்திரிகையின் இட்டுக்கட்டிய கடிதம் என்று முத்திரை குத்துவது சரியாகுமா? உங்களுக்கு குறிப்பிட்ட பத்திரிகை பிடிக்கவில்øயென்றால் அதன் வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது// என்று கருத்தூத் தெரிவித்திருந்தார்.
அவரது தளத்திலும் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் தனது முந்தைய பதிவில்...

//"சொந்தச் செலவில் சூனியம்"
பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை அவர்களாகவே கெடுத்துக் கொள்ளும் மோசமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது.// என்றும் எழுதியிருக்கிறார்.

அந்த லாஜிக் படி பார்க்கும்போது, காவல்துறையினர் 'பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் காவலர்களைக்' கைது செய்ததன் மூலம், மக்கள் மத்தியில் காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுத்துக் கொண்டது.

'குஜராத்'தில் பணம் வாங்கிக் கொண்டு அப்துல்கலாமுக்கு வாரண்ட் பிறப்பித்த நீதிபதியை தண்டித்ததன் மூலம் நீதிமன்றம் தனது நற்பெயரை மக்கள் மத்தியில் கெடுத்துக்கொண்டது.

அதாவது தவறு செய்பவர் உயர்நிலையில் இருக்கும்போது, அவர் தவறிழைப்பது பிரச்சினையல்ல; அவரை தண்டிப்பதோ, அல்லது கண்டுபிடித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதோ தான் தவறு போலும்!

சரி, இப்போதைய பிரச்சினைக்கு வருவோம்! அதோ இதோ என்று ஒரு ஆபாசப் பேர்வழியினைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'அந்துமணி' என்பவர் பத்திரிகையாளர் என்ற ஒரே காரணத்துக்காக மற்ற பத்திரிகைகள் எல்லாம் வாய்மூடி மவுனியாயிருக்கின்றன. தன்னிலை விளக்கம் போடவும் இடம் தருகின்றன. பிரச்சினை என்ன என்பதை அந்த ப்அத்திரிகைகள் போட்டிருந்தால் தானே, அதன் வாசகர்களுக்கு தன்னிலை விளக்கம் புரியும்!
தாங்கள் என்ன செய்தாலும் கேட்க யாருமில்லல என்ற துணிச்சலில் ஆடிக்கொண்டு 'பத்திரிகையாளர்' என்ற பெயரை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களை ஒடுக்குவதே உண்மையாக ஊடகங்கள் மேல் அக்கரை கொண்டுள்ளவர்களின் பணியாகும்.

மக்கள் மேல் ஊடகங்கள் செலுத்தும் அதிகாரத்தை வெளிப்படுத்தி அவர்களைத் தோலுரிக்கச் செய்யவும் அது மிகவும் பயன்படக்கூடியதாகும்.

தன் குழுவினரே குடிக்கும் போது பக்கத்திலிருந்து ஊத்திக் கொடுத்ததாக மட்டும் எழுதிக் கொண்டிருந்த 'அந்துமணி' என்ற 'ரமேஷ்' என்ற 'ராமசுப்பு அய்யர்'வாள் தன் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கும், தினமலரின் பிற பதிப்பாளர்களான பங்காளிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிணக்கு காரணமாக பங்களிகளால் நடத்தப்படும் 'காலைக்கதிர்' நாளிதழுக்கு தங்கள் பணியாளர்கள் போகாமல் தடுப்பதற்காக ஊத்திக் கொடுத்த கதையை கடைசி வரை எழுதவே இல்லை.

திராவிட இயக்கத்டையும் அதன் தலைவர் தந்தை பெரியரையும் கொச்சைப்படுத்துவதை தனது எழுத்துக்களின் முக்கியப் பணியாகக் கருதி பெரியாரை 'பெரியார்' என்று அழையாமல், 'ஈ.வெ.ரா' என்று மட்டும் அடையாளப்படுத்த முயன்ற தினமலர் கூட்டத்தின் தயாரிப்பில் ஒன்று தான் நல்லவன் வேடமிட்டு, அந்துமணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு, முகமுடி தரித்து உலவியது.

உத்தமர்கள் பெயரில் உலாவரும் ஆப்பசப் பார்ப்பனர்கள் இப்படித்தான் பூணூலும் கையுமாக மாட்டிக் கொள்கிறார்கள். அது சல்மா அயூப்-ஆக இருந்தாலும் சரி, அந்துமணியாக இருந்தாலும் சரி!
அந்த வகையில் இப்படி ஒரு விசயத்தில் அந்து மணியின் முகமூடி கிழிந்தது சாலப் பொருத்தமே!

Tuesday, July 17, 2007

'பொன்விழா' -பதிவு!

தந்தை பெரியாரின் போராட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜாதி ஒழிப்புப் போராட்டம்' எனப்படும் ஜாதியைப் பாதுகாக்கும் 'அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம்' நிகழ்ந்து வரும் 2007 - நவம்பர் 26- ஆம் தேதி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

திராவிடர் கழகத்தின் போராட்ட வரலாற்றில், பெரியார் தொண்டர்களின் மனோதிடம் என்னவென்பதை வரலாறு கண்டுகொண்ட போராட்டம்!

'போராட்டத்திற்கான தண்டனை என்னவென்பதை முடிவு செய்து சட்டமியற்றிக் கொள்ளுங்கள், அதன் பிறகு என் போராட்டத்தை வைத்துக் கொள்கிறேன்' என்று வரலாறு காணாத வகையில் அறிவிப்புச் செய்து, தலைவர் பெரியார் நடத்திய போராட்டம்!


போராட்ட வீரர் ஒருவருக்கு இரண்டாண்டுகள் தண்டனை அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதற்கு அந்த போராளி, "சட்ட எரிப்பு போராளிகளுக்கு கடுமையான த்ண்டனை வழ்ங்கு' என்று நேரு மாமா சொன்னபின், ஏன் இவ்வளவு குறைந்த தண்டனை தருகிறீர்கள் மாமா!" என்று கேட்ட வரலாறு - வரலாற்றுக்கே புதிது!


போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் மேல் இரக்கப்பட்ட நீதிபதி, " நீ (அரசியல் சட்டம் என்று எழுதப்பட்ட) வெறும் தாளைத் தானே கொளுத்தினாய்?" என்று கேட்டபோது, "நான் கொளுத்தியது வெறும் தாளாக இருக்கலாம். ஆனால் என் நோக்கம் அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது தான்" என்ற சிறுவனின் பதிலால் நீதிமன்றத்தையே அதிரச்செய்த போராட்டம்!


ஒளிந்து ஒளிந்து போராட்டம் நடத்தாமல், பெயரை அறிவித்து 'விடுதலை'யில் பட்டியல் வெளியிட்டு போராட்டம் நடத்தி சிறை காணும் வரலாறு படைத்த போராட்டம்!

இதோ பெரியார் அழைக்கிறார்:
"நான் எதற்காகச் சிறை செல்கிறேன்?"
சூதாடிய குற்றத்துக்காகவா?
கள்ளச்சாராயம் காய்ச்சிய குற்றத்துக்காகவா?
கொள்ளைக் குற்றத்துக்காகவா?
கொலைக் குற்றத்துக்காகவா?
மோசடிக் குற்றத்துக்காகவா?
பலவந்தப் புணர்ச்சிக் குற்றத்துக்காகவா?
பதுக்கல் - கலப்படம் குற்றத்துக்காகவா?
சாதிவெறியின் கலவரக் குற்றத்துக்காகவா?
என்ன குற்றத்துக்காக நான் சிறை செல்கிறேன்?

சாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேண்! சர்க்கார் கண் விழிக்கவில்லல. ஆகவே, சாதிக்கு ஆதாரமான சட்டத்தை கிழித்துத் தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் (அரசின்) மனதை மாற்றலாமா, என்று கருதி அதைச் செய்தேன்.

இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? எந்தப் பொருளுக்கேனும் நாசமுண்டா?

இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால், இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா?

'சாதியை ஒழிப்பதற்காக மூன்றாண்டு சிறை வாசஞ் செய்தான்' ன்பதை விடைப் பெரும் பேறூ, முக்கியக் கடமை, வேறென்ன இருக்கிறது?

இந்த விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

பெரியார் அறிக்கை (விடுதலை 9-11-1957)
நன்றி: பெரியார் களஞ்சியம் - தொகுதி(11) [ஜாதி தீண்டாமை பாகம்(5)], பக்கம் 59, 60
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

இன்று வரை தொடர்ந்து வரும் இந்தப் போராட்டத்தின் பாதையில் கிடைத்த ஒரு வெற்றிதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டம்! விந்தையாக இருக்கிறதா? ஜாதி ஒழிய வேண்டுமென்று போராடிய பெரியார் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கேட்டார் என்பது முரணாகத் தெரியலாம்! ஆனால் கண்ணதாசனின் வரிகளைப் போல் 'ஜாதி என்னும் நாகத்தை தாக்கித் தாக்கி பெரியார்' விரட்டியபோது அது, கோவில் கருவறைக்குள் நுழைந்து கொண்டது. அதை விரட்டிட வகுத்த சட்டம் -அய்யா மறைந்து 33 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. அய்யாவின் கனவான ஜாதி ஒழிப்பும், சமதர்ம சமுதாயமும் நிறைவேறும் நாளுக்கு இப்பொன்விழா ஆண்டில் உறுதியேற்போம்!

ஜாதி ஒழிப்புக்காக சிறையிலும், களத்திலும் உயிர் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!

படம்: எடமேலையூரில் நடைபெற்ற போராளிகளுக்கான பாராட்டுவிழா! - தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று பாராட்டினார்.


லால்குடியில் 2007 - நவம்பர் 26-இல் ஜாதி ஒழிப்புப் போராட்டப் பொன் விழா மாநாடு:
தமிழர் தலைவர் அறிவிப்பு!

Related Posts with Thumbnails