நீண்டுபோய்க் கிடந்த
கரடு முரடான குறுகிய பாதை!
இரு பக்கமும் பார்த்தேன்.
ஒரு புறம்...
‘மவுத்’ஆக்கப்பட்ட
முகமதியர் கபர்ஸ்தானம்!
மறுபுறம்...
மரிக்கும்படி செய்யப்பட்ட
’மாதா’ புதல்வர்களின் கல்லறை!
’ராமராஜ்யம்’ எனும்
நாமத்தை உச்சரித்தபடி
ஒரு கூட்டம்
எதையோ
தூக்கிச் சென்றது.
என்னவென்று பார்த்தேன்!
என்னென்று சொல்வேன்?
பெயர் மட்டும்
சொல்லிக் கொண்டிருந்த
இந்திய ‘மதச் சார்பின்மைக்கு’
காவி சுற்றப்பட்ட
வசதியான
அருமையான பாடை!
கண் திறந்தது.
கனவு தான்... ஆயினும்
நனவாவதற்கு
சாத்தியக் கூறுள்ள கனவு!
ஒரு வேளை...
கனவு நனவாகி
இராம இராஜ்யம் வந்தால்...?
மாளப்போவது
மதச்சார்பின்மை மட்டுமல்ல
மிச்சமீதியிருந்த
மனிதநேயமும் தான்.
சாகப்போவது
சிறுபான்மையோரல்ல...
பெரும்பான்மையோர்
ஆம்..
தப்பித் தவறி
இப்போது தான் படிக்கும்
நம் காதுகளில் தேனாய்பாய
காய்ச்சப்பட்ட ஈயம்
அணியமாய் இருக்கும்!
நம்மை
சம்புகவதம் செய்ய
கொடுவாள் தயாராகி
ராமனார் கையில்
கொடுத்தனுப்பப்படும்!
கல்லூரிகளெல்லாம்
கல்லுடைப்புத் தளங்களாகும்!
’சதி’யை நம்பாத
‘பதி’யின் ஆட்சியில்
அக்கினி குண்டங்கள் கட்ட
அக்கர(ம) சேவகர்கள் உண்டு!
இராமராஜ்யம் அமைக்க
அவர்கள் தயார்!
நீங்கள் - தயாரா?
(சுமார் பத்து ஆண்டுகளுக்குமுன் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கவிதைப் போட்டியின் தலைப்பு ‘ராமராஜ்யம்’ என்பது! யார் நடத்தினார்கள்? நான் எழுதியதை அனுப்பினேனா- இல்லையா என்பதெல்லாம் நினைவில்லை. இந்தச் சூழலுக்குப் பொருந்துவதால் இங்கே!)
கருத்துகள்