கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே எ.எ.வி.வி. (எண்ணி எழுதாமல் விட்ட விசயம்) மற்றொன்று - கள்ளநோட்டு விவகாரம். நாடெங்கும் இப்பிரச்சினை கவனம் பெற்றிருக்கும் சூழலில் இப்போதாவது எழுதிவிடுவோம் என்ற வேகத்துடன் அதிகாலை 4மணிக்கு எழுதத் தொடங்குகிறேன்.
--------------------------------------------------------------------
கையில் கிடைக்கும் நோட்டு ஒத்தையோ கத்தையோ, அது கள்ள நோட்டா நல்ல நோட்டா என்று சோதனை செய்து, பணத்தைக் கொடுத்தவர் வயிற்றில் பீதியைக் கிளப்பி ஆராய்ச்சி செய்யும் பழக்கம் 2010-ன் இறுதிவாக்கில், மின்னஞ்சலில் கிடைத்த தகவல்களைக் கொண்டு எதார்த்தமாய் தொடங்கியது.
எனது ஆய்வில்... கிட்டத்தட்ட ஆய்வாகவே இதைச் செய்தேன் என்பதை அருகில் உள்ளவர்கள் அறிவார்கள்- நொந்த மனத்துடன்....! ஏன்னா அவங்க கிட்ட இருந்துதானே கத்தையைப் புடுங்கி ஆராய்ச்சி பண்ணுவேன். அவங்களுக்கும் இந்த ஆய்வு நோய் தொற்றிக் கொண்டது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
எங்களது ஆய்வில் மிகக் குறைந்த அளவு என்று எடுத்துக் கொண்டாலும் 15 % முதல் 25% வரை கள்ள நோட்டுப் புழக்கம் இருந்துவருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் அது பெரிதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே இருந்தது. 1000, 500 மட்டுமல்லாமல், சர்வ சாதாரணமாக 100 ரூபாய், 50 ரூபாய், 20, 10 வரைக்கும் கள்ள நோட்டுகள் இருக்கின்றன.
வங்கிகளில் பீதியைக் கிளப்பிய அனுபவமும் உண்டு. SBI-ல் சென்று அவர்கள் கொடுத்த இரண்டு 500 ரூபாய்த் தாள்களில் ஒன்று கள்ள நோட்டு என்று நான் சொன்னதும் அரண்டு, மிரண்டு, கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் எந்திரத்தில் எல்லாம் வைத்துப் பார்த்தனர். ‘இல்ல சார்’ என்று பதறிய காசாளர், கடைசியில் ஏன் வம்பு என்று எனக்கு நோட்டை மாற்றிக் கொடுத்துவிட்டார். உடன் வந்த நண்பருக்கு பேரதிர்ச்சி..! வங்கியில் கூட எது கள்ள நோட்டு என்று கண்டுபிடிப்பதில் இருக்கும் தெளிவின்மை.
ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்தும் கள்ளநோட்டுகள் வந்திருக்கின்றன. ஒருமுறை தானியங்கி காசுவழங்கும் எந்திரத்தில் இருந்து தோழர் (பலர்பால் தானே!) எடுத்துக் கொடுத்த 10000 ரூபாயைக் கவனித்துப் பார்த்ததில் 40% அதாவது 4000 ரூபாய் கள்ள நோட்டு! பிறகு அவர்கள் குடும்பத்துக்கே அது குறித்து விளக்கம் அளித்தேன். கள்ள நோட்டு எது என்று கண்டுபிடிக்க அன்றைக்கு இணையத்தில் இருந்து இரண்டு இணைப்புகளை அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். அவ்விரண்டில் RBI கொடுத்திருந்த விளக்கத்தில் நான் சொன்ன தகவல்கள் இல்லை. காரணம் அது 1999 ஆண்டுக்குரிய எச்சரிக்கை! இன்றும் அது இணையத்தில் உள்ளது. மற்றொரு இணைப்பு வேலை செய்யவில்லை. (http://pauri.nic.in/IdentyFakeNote.htm)
காலந்தோறும் கள்ளநோட்டுகளின் தரம் உயர்ந்தே வந்திருக்கிறது. எத்தனையோ நுணுக்கங்களை அரசு கொணர்ந்தாலும், அவற்றை அடுத்தடுத்த பதிப்பில் உயர்த்திக் கொண்டே வருகிறார்கள் கள்ளநோட்டு தயாரிப்பாளர்கள். நான் பார்த்த கள்ளநோட்டுகளின் தரமும் வெவ்வேறு விதத்தில் இருந்தது. பார்த்த உடனே பளிச்சென வித்தியாசம் தெரியும் வகை ஒன்று. அந்த நோட்டுகளை அச்சின் தரத்திலும், வண்ணங்களைக் கொண்டுமே எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ரோஸ் நிறம் அப்பிக் கிடக்கும் 50 ரூபாய் நோட்டுகளும் மஞ்சளாய் இல்லாமல் பச்சை நிறத்துக்கு மாறி இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளும் இவ்வகையின.
ஆனால் தரத்தில் சவால் விடும் நோட்டுகளையும் கூட, இரண்டு, மூன்று இடங்களைச் சோதிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். முழுமையாக கள்ள நோட்டுகளைச் சோதிப்பது எப்படி என்பதற்குக் கீழே கொடுத்திருக்கும் படங்களைப் பார்க்கலாம். இவற்றில் சில சரியாக நம்மால் உணரமுடியாதவை.
உடனே கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் (நான் கையாண்டவை):
பணத்தை எண்ணும்போது, வெள்ளைப் பகுதி (காந்தி படம் நீர்க்கோடு தெரிவதற்காக விடப்பட்டிருக்கும் அல்லவா?) மேலே தெரியுமாறு வைத்துக் கொண்டு எண்ண வேண்டும். (இயல்பாக ஒரே சீராக பணத்தை அடுக்கிக் கொண்டு எண்ண வேண்டும் என்ற அடிப்படையை என் தந்தையிடமிருந்து நான் கற்றிருக்கிறேன். அதிலும் பழைய தாள்களை முன்னால் வைத்து, புதிய தாள்களை அடியில் வைத்து அடுக்கிக் கொண்டு வரும் என் அய்யாவின் நேர்த்தி என்னைக் கவர்ந்த ஒன்று)
எண்ணுதல் - சரியான முறை |
![]() |
எண்ணுதல் - தவறான முறை |
* இவ்வாறு எண்ணும் போது முதலில் கவனிக்க வேண்டியது சீரான பதிவு. (கீழே விவரம் கொடுக்கப்பட்டுள்ளது)
கடந்த 7 வருடங்களாக வெளிவரும் புதிய நோட்டுகளில் ரூபாயின் மதிப்பும், அதற்கு முன்பு பூ வடிவங்களும் இவ்விடத்தில் அச்சிடப்பட்டுள்ளன. புதிய நோட்டுகள் கையில் இருந்தால் கண்டிப்பாக சீரான பதிப்பில் ரூபாயின் மதிப்பு, அதாவது 100, 500, 1000 போன்ற எண்கள் இடம்பெற்றிருக்கும்.
![]() |
பழைய தாளில் உள்ள பூ வடிவம் |
* அதில் சந்தேகம் வந்தால் அடுத்து நோக்க வேண்டியது. காந்தி நீர்க்கோடு படம் இருக்கும் அந்த வெள்ளைப் பகுதியினுள் பக்கவாட்டில் நீர்எழுத்திலேயே அச்சிடப்பட்டிருக்கும் ரூபாயின் மதிப்பு. (காந்தியின் நீர்க்கோடு படம் கள்ளநோட்டிலும் உண்டு. ஆனால் அதற்கடுத்த தொழில்நுட்பமான கருப்பு வட்டமிடப்பட்டிருக்கும் இடம் இன்னும் கள்ளநோட்டில் வரவில்லை.)
![]() |
புதிய தாளில் உள்ள ரூபாய் மதிப்பு சீரான பதிவு மற்றும் நீர் எழுத்து |
* இதில் சந்தேகம் இருந்தால் பின் பக்கம் திருப்பிப் பாருங்கள். நல்ல நோட்டில், கீழ்ப்பகுதியில் நடுவில் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற தகவல் இருக்கும். கள்ளநோட்டில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு இருக்காது.
* கள்ளநோட்டில் வண்ணங்கள் சரியான அளவில் இல்லாமல், அப்பிவைத்தது போல அடுத்த படங்களிலும் கூட சேர்ந்திருக்கும். நல்ல நோட்டில் சாட்டிலைட், கணினி போன்றவை பிசிறினிறி தனியாகத் தெரிவது போல் கள்ள நோட்டில் தெரியாது. அந்த சிகப்பு வண்ணம் அடுத்த படங்களின் மீதும் ஒட்ட்யிருக்கும்.
இவை தவிர, பாதுகாப்பு இழையின் அளவும் வடிவமும் கள்ளநோட்டில் தனியாகத் தெரியும். ஏதோ பேருக்கு பேக்கரியில், பால்பேடா மீது சில்வர் பூசியது போல இருக்கும். ஆனால் நல்ல நோட்டில் தெளிவாகத் தெரியும்.
பிறகு தொடு உணர்வு, வண்ணம் மாறும் எழுத்துகள், சாய்த்துப் பார்த்தால் தெரியும் பணத்தில் வண்ணம் என்று இதர ஏரியாக்கள் நிறைய உண்டு. அவற்றை விளக்கமாகக் கீழே பாருங்கள். இப்போது RBI வெளியிட்டிருக்கும் தகவல்களிலும், துண்டறிக்கைகளிலும் அவை தெளிவாக உள்ளன. இதற்கென அவர்கள் பன்மொழிகளிலும் தயாரித்திருக்கும் விளம்பரமும் சிறப்பாக இவற்றை விளக்கும்.
http://www.paisaboltahai.rbi.org.in/poster.htm - இவ்விணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளத்தக்க துண்டறிக்கைகளும், அதற்குக் கீழே பிளாஷில் செய்யப்பட்ட விளக்கங்களும் உள்ளன.
http://www.paisaboltahai.rbi.org.in/tvc.aspx - இவ்விணைப்பில் விளக்கக் காணொளி உள்ளது. தமிழிலும் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
![]() |
படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம் |
கருத்துகள்