Wednesday, May 15, 2013

அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்


Kavin Malar கவின் மலர்
ஒரு கவிமனது தற்கொலையை நோக்கி அவ்வபோது பயணித்துச் சென்று பின் மீண்டும் இயல்புக்குத் திரும்புவது வாடிக்கையானது. வாழ்நாளில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் வராத அளவுக்கு மனிதர்கள் அத்தனை இன்பமான வாழ்க்கை வாழ நம் சமூகத்தில் பணிக்கப்பட்டிருக்கவில்லை. அவரவர் தற்கொலை எண்ணத் தருணங்களை மீண்டும் எண்ணிப்பார்க்க வைக்கிறது கவிதை. பாபுவின் கவிதையில் 1.40 என்றால் எனக்கு 2.40 ஆக இருக்கலாம். உங்களுக்கு 3.40 ஆக இருக்கலாம். ஆனால் ஒரு நாளின் எல்லா நொடியிலும் உலகின் எந்த மூலையிலாவது யாராவது ஒருவர் தற்கொலை எண்ணத்துடன் மடிந்துகொண்டிருக்கலாம் அல்லது முயன்று கொண்டிருக்கலாம். அந்த நொடியை நினைத்துப் பார்த்து அச்சங்கொள்ளவோ அல்லது அப்பாடா என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ வைக்கிறது இந்தக்கவிதை. கவிதையில் ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்கிற வரிகளே முக்கியமானவை. இந்த வரிகள் இல்லையெனில் இந்தக் கவிதை இல்லை. ஒருவேளை அம்மு தொடர்பு எல்லைக்குள்ளேயே இருந்திருந்தால் இந்தக் கவிதை நமக்குக் கிடைத்திருக்காதோ என்னவோ? ஒவ்வொரு மனமும் துயரங்கள் அழுத்துகையில் ஓர் அம்முவின் ஆறுதல் வார்த்தைகளுக்காகத்தானே துடிக்கிறது? அம்முவுடன் ஒரு வார்த்தை பேசிவிட்டால் தற்கொலை எண்ணம் மறைந்துவிடும். எல்லோருக்காகவும் ஒரு அம்மு இருப்பாள் அல்லது இருப்பான். அந்த அம்மு ஒரு தோழியாகவோ, நண்பனாகவோ, நூலாகவோ, இசையாகவோ கூட இருக்கக்கூடும். ஆனால் தற்கொலைகளைத் தவிர்க்க அம்முக்கள் அவசியம். யாரிடமாவது இரண்டு வார்த்தைகள் பேசிடத் துடிக்கும் மனதுக்கு எல்லோரும் அம்முவாகிவிட முடியாது என்றாலும் நாமும் அம்முவாக முயலலாம்.
- வே.பாபு(Babu Thakkai Babu) வின் ‘மதுக்குவளை மலர்’ கவிதைத் தொகுப்புக்கான விமர்சனத்திலிருந்து....

-----------------------------------------------
இதைப் படித்த பின், விருப்பம் போடுவதற்குக் கூட ஒவ்வொரு பிக்சலாக, மவுசை நகர்த்தியது கை! அவ்வளவு தான் அதற்கு வலுவிருந்தது. மேல் கீழாக, கீழ் மேலாக, இடையிலிருந்து.... என்று மீண்டும் மீண்டும் படிக்கிறேன் - இந்த விமர்சனத்தை! எப்படியாவது அந்தக் கவிதையை இந்த நொடியே படித்துவிட வேண்டும் என்று துடிக்கிறது மனம்!

இணையத்தில் தேடிக் கிடைத்த (http://malaigal.com/?p=572) ஓரு சில வரிகளோடு, ‘அம்முவோ தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்’ என்ற வரிகள் எங்காவது பொருந்துகின்றனவா என்று அலைகின்றன கண்கள்! ப்ச்...

இந்த வரியைத் தேடித் தேடி எண்ணற்ற அம்முக்கள் கிடைக்கிறார்கள் இணையத்தில்! ஒவ்வொன்றிலும் நுட்பமான ஏதோ ஓர் உணர்வு அழுத்துகிறது. http://vinaiooki.blogspot.in/2012/07/blog-post.html, http://dhineshmaya.blogspot.in/2010/12/blog-post_22.html

மீண்டும் இந்த விமர்சனத்திற்கே வந்து படிக்கிறேன். 50 ரூபாய் தான் புத்தகம்.. அதற்கு 21 ரூபாய் அஞ்சல் செலவு சொல்லும் டிஸ்கவரி புக் பேலஸ் இணையதளத்தில் இன்னும் இரண்டு புத்தகங்கள் சேர்த்தால் எவ்வளவு அஞ்சல் செலவு என ’எண்’ணிப் பார்க்கிறேன்! ம்ம்ஹூம்... இன்னும் அவசரம் தணியவில்லை. புத்தகம் வந்துசேர இரண்டு நாட்களாவது ஆகும். இன்றைய பணிகளின் நடுவில் பயணிக்கும் போது எந்தப் புத்தகக் கடையில் இந்தக் கவிதை கிடைக்கும்? என்று மீண்டும் தேடுகிறேன்.

5:40 முதல் 6:40-அய்த் தாண்டியும் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். இடையில் ஒரு 4:40 இருந்திருக்கிறது. அதில் யாருக்கு என்னவாயிற்றோ? அம்முக்கள் எப்போதும் தொடர்பு எல்லையிலேயே இருக்கட்டும்.

தொடர்பு கிடைக்காத நொடிகளில் அடித்துக் கொள்ளும் அம்முக்களின் பதற்றம் என்னைப் பற்றிக் கொள்கிறது... ஒரு சில நிமிடங்களாவது அம்முவுக்கு வாய்ப்புக் கொடுங்கள்! இல்லையேல், பின்னாளில் அம்மு - தனக்கொரு அம்முவைத் தேடவேண்டியிருக்கும்.

Friday, May 03, 2013

அட சின்னச் சின்ன அன்பில் தானே...

தொப்பிகளின் ரசிகன் நான்! 

காரைக்குடியில் இருந்தவரை காலை அணியும் தொப்பியை இரவு வீட்டுக்குத் திரும்பும் வரை கழற்றும் வழக்கம் இல்லை. விதம்விதமான தொப்பிகளின் மேல் எப்போதும் ஈர்ப்பு உண்டு. வழக்கமான முன் பக்கம் மட்டும் நிழல் தரும் தொப்பி, கிரிக்கெட் அம்பயர்கள் & சில வீரர்கள் பயன்படுத்தும் வட்ட வடிவ திடமாக நிற்கும் பட்டியுடைய நிழல் தரும் தொப்பி, இன்றைக்கு சேரன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் பயன்படுத்துவதைப்போல வட்ட வடிவமாக, ஆனால் மடங்கியிருக்கும் தொப்பி (எம்ஜிஆர் தொப்பியின் நவீன வடிவம்) என்று எல்லா வகையிலும் பல வண்ணங்களில் குறைந்தது 10 தொப்பிகளாவது வீட்டில் இருக்கும். 


குஷி படம் வந்த பின் வழக்கத்தை விட நீளமான வளைந்த முன்பகுதியுடனான தொப்பிகள் வரத் தொடங்கின. கார்த்திக் ஸ்டைல் தொப்பி அய்யாவுக்குப் பெரிதும் பிடிக்காவிட்டாலும், அதன் மேல் ஓர் ஆசை எப்போதும் உண்டு எனக்கு! இவை தவிர முன் பக்கம் கொஞ்சம் காற்றோட்டம் வரும் வசதியுள்ள சிங்கப்பூர் தொப்பி (அது என்ன அப்படி பெயர் என்றெல்லாம் கேட்கக் கூடாது; அப்போது அப்படி ஒரு தொப்பி சிங்கப்பூரிலிருந்து வந்தது. 


அதனால் அந்தப் பெயர்). மொட்டைத் தலையில் கவிழ்த்தது போன்ற நிழல் தரும் பகுதி இல்லாத ஆளவந்தான் தொப்பி, கிரிக்கெட் பார்க்கும் போது முன்பக்க நிழல் தரும் பகுதி மட்டும் கொண்ட தொப்பி போல பழையவற்றில் நாடாவோ, எலாஸ்டிக்கோ கோர்த்து நாங்களாக உருவாக்கிக் கொள்ளும் sun shade தொப்பி, பெரிய குதிரைக்காரன் தொப்பி என்று நினைவில் நிற்பவை மட்டும் இத்தனை ரகம்.


பள்ளி செல்லும்போதும், வரும்போதும், விடுமுறை வெய்யில் காலங்களில் கிரிக்கெட் விளையாடும் போதும் தேர்ந்தெடுத்து அணிந்துசெல்வது உண்டு. பள்ளி முடிந்து அழைத்துச் செல்ல வரும் அய்யா, கையோடு எனக்கும் தங்கைக்கும் இரண்டு தொப்பிகள் எடுத்து வந்திருப்பார். விளையாடும்போது கொஞ்சம் மறந்துவிட்டுக் கிளம்பினாலும், எதிரிலிருக்கும் மைதானத்திற்கு ஏழெட்டு தொப்பிகளைக் கொடுத்தனுப்புவார் அம்மா. அதில் நான் அணிந்துகொண்டது போக, உடன் விளையாடுவோருக்காக மற்ற தொப்பிகள். விளையாட்டு முடிந்ததும் பேட்கள், ஸ்டம்ப்கள், தொலைந்தது-கிழிந்தது போக எஞ்சியுள்ள பந்துகள், ஸ்டம்ப் ஊன்ற எடுத்துவரப்பட்ட கடப்பாறை ஆகியவற்றோடு தொப்பிகளையும் பத்திரமாகத் திருப்பி எடுத்துச் செல்லவேண்டும்.

மாநாடுகளில், ஊர்வலங்களில் தனித்து அடையாளம் காணும் வண்ணம் தொப்பி அணியும் வழக்கம் உண்டு. கருப்பு தொப்பியில் நடுவில் சிவப்பு வட்டம் போட்டுத் தைத்த தொப்பிகள் இருக்கும். குறைந்தது கருப்பின் நடுவில் சிவப்பு இருக்குமாறு தொப்பி இருக்கும். அல்லது பெரியார் படம், கழகக் கொடி பொறித்த பெரிய அளவிலான பேட்ச்சை எடுத்து தொப்பியில் குத்திவிடுவோம். இவை எங்கள் அய்யாவின் (சாமி சமதர்மம்) பணியாக இருக்கும். எங்கள் சிறுவயது புகைப்படங்கள் பெரும்பாலானவற்றில் தொப்பிகள் இல்லாதிருப்பது கடினம்.


தொப்பியைப் போட்டால் இரவிலும் கழற்றாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. (வியர்வை காரணமாக முடி ஒட்டிக் கொள்ளும்.) பள்ளிக்காலம் முடிந்து கல்லூரிகளிலும் என் அடையாளங்களில் ஒன்றாக தொப்பி இருந்திருக்கிறது. தொப்பி இல்லாவிட்டால் ‘என்ன தொப்பியைக் காணோம்’ என்று பிறர் கேட்கும் அளவிலானது அந்த அடையாளம்! இது ஒரு வேளை எங்கள் அய்யா தொப்பி அணியும் பழக்கத்தின் பாதிப்பாக இருக்கலாம். கைப்பையுடன் தொப்பியும் பிடித்தபடி மறந்திடாமல் கிளம்புவார். தவறினாலும்,வண்டியைக் கிளப்பும்போதே தொப்பிய மறந்திட்டிங்க என்று யாராவது நினைவுபடுத்தும் முன் தொப்பியைக் கேட்டுவிடுவார் அய்யா. 

சென்னைக்கு வந்து அதிகம் தொப்பி அணியும் சூழல் அற்றுப்போன பின்னும் ஆசைக்கு அவ்வப்போது புது வடிவ தொப்பிகள் வாங்குவதுண்டு. புத்தாடைகள் எடுக்கும்போது, கண்டிப்பாக ஒரு சில தொப்பிகளும் அவற்றில் அடங்கும். கடந்த பத்து ஆண்டுகளில் அதில் ஒன்று சேகுவேரா ஸ்டைல் தொப்பியாக இருக்கும். வழக்கம் போல கருப்பு வண்ணத்தில் சிவப்பு நட்சத்திரமோ, வேறு வடிவங்களோ கொண்ட தொப்பிகளாக இருக்கும். இவை அய்யாவுக்காக நான் தேர்ந்தெடுத்தவை!

நான் எனக்கென வாங்கும் தொப்பிகளை படப்பிடிப்புக்கோ, சுற்றுலாவுக்கோ நான் செல்லும் நாட்களில் பயன்படுத்துவதற்காக என்று வைத்திருப்பேன். ஹெல்மெட் அணியக் கட்டாயப்படுத்தப்படும் காரணத்தால் வெளியில் செல்கையில் தொப்பி பயன்படுத்த முடிவதில்லை. சென்னைக்குள் பேருந்து, தொடர்வண்டிப் பயணங்கள் என்றால் அப்போதும் தொப்பி அவசியப்படாது. இப்படியாக தொப்பி பயன்படுத்தும் அளவு குறைந்து போனதால், காரைக்குடியில் என் அடையாளமாக இருந்த தொப்பியின் முக்கியத்துவம் சென்னை நண்பர்களுக்குத் தெரியாது!


ஆசிரியர் 80-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் போது நான் மட்டும் ஆசிரியர் படத்துடன் 80-ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்த தொப்பியை அணிந்திருந்தேன். பலர் இது ”என்ன எங்களுக்குக் கிடைக்கல? நீங்க எங்க வாங்கினீங்க” என்றனர். இன்னும் பலர் ”என்ன தொப்பி  போட்டிருக்கீங்க? நான் யாரோன்னு நினைச்சேன்” என்றனர்(!?) 

விழாவுக்காக காரைக்குடியிலிருந்து சென்னை வந்த எங்கள் அய்யா கையோடு இரண்டு தொப்பிகள் எடுத்து வந்திருந்தார் (எனக்கொன்று - தம்பி புருனோவுக்கொன்று). ஆசிரியரின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு நானே வடிவமைத்து, தொப்பி வெளியிடவேண்டும் என்று அடம் பிடித்ததால், விழாக் குழுவின் சார்பில் அவசரம் அவசரமாக தயாரித்து விற்பனை செய்யப்பட்ட தொப்பி தான் அது! ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தவற்றில் பயன்படுத்தப்படாமல் இருந்த இரண்டு புதிய தொப்பிகளில் 75 என்ற இடத்துக்கு மேல் வெள்ளை நிற நீர் வண்ணத்தில் 80 என்று திருத்தி எழுதிக் கொண்டு வந்திருந்தார் அய்யா! அன்று பெரியார் படமும் கொடியும் போட்ட பேட்ச் குத்திக் கொடுத்த அதே உணர்வுடன் ஆசிரியர் பிறந்தநாளுக்குப் புதுத் தொப்பி தந்தார்! 


ஆசை தீர அன்று முழுவதும் தொப்பியுடன் அலைந்தேன் நான். ”எங்க வாங்கினீங்க?” என்று மாணவரணிச் செயலாளர் இளந்திரையன் கேட்டபோது, ’எனக்காக என் அய்யா செய்தது’ என்று சொன்னதில் அணிந்திருந்த எனக்கு சின்னப் பிள்ளையாக ஒரு மகிழ்ச்சி; ’என் பையனுக்காக நான் செய்தது’ என்பதில் அய்யாவுக்குப் பெருமிதம். ’உனக்கு அய்யா ஏதோ தொப்பியெல்லாம் செஞ்சு எடுத்துட்டு வந்தாங்களாம்?’ என்று தொலைப்பேசியில் கேட்ட தங்கையின் கேள்வியில் குட்டியூண்டு பொறாமை.

” ...... .......... ....... - அட
சின்னச் சின்ன அன்பில் தானே 
ஜீவன் இன்னும் இருக்கு!”
............................. ..................................... ...........................

இதோ, இன்று அதே தொப்பியுடன் கிளம்புகிறேன்... இராஜபாளையத்தில் நடக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டுக்கு! 

நன்றி அய்யா!

Monday, April 29, 2013

கலைஞரின் உண்ணாவிரதம் - நாடகமா? (ஒரு மீள் பார்வை)

2009 ஏப்ரல்: ஈழப் போர் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு தலையாக புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். மறு புறம் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இலங்கை சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. முழுவீச்சில் புலிகளை அழிக்கவும், அதனையே சாக்காக வைத்து தமிழர்களை அழிக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு - காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில்! அதுவரை போரென்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொல்லிவந்த ஜெயலலிதா (அதிமுக), டபுள் சிறீ ரவிசங்கர் காட்டிய படங்களைப் பார்த்ததும், ஈழத்தில்... சாரி... சாரி... இலங்கையில் நடந்து வந்த கொடுமைகளை அப்போது தான் உணர்ந்துகொண்டதாகக் கூறி, தனது ஈழ முகமூடியை அணியத் தொடங்குகிறார். அதுவரை கூடவே சுத்திக் கொண்டிருந்த செவ்வாழைகளும், புதிதாகப் போய்ச் சேர்ந்தவர்களும் சொல்லிப் புரியாததை டபுள் சிறீ ரவிசங்கர் சொல்லித் தான் தெரிந்துகொண்டாராம். சரி, போய்த் தொலைகிறது.

ஈழப்பிரச்சினைக்காக 2008 முதல் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் போராடிக் கொண்டுமிருந்த திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த ஆதரவுகள் சேருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வந்தால், ஏதோ ஈழத்தை அவர்கள் வாங்கித் தந்துவிட உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுத்தது போல இங்கிருக்கும் சிலர் பம்மாத்தும், சிலர் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ’அம்மா’த்தும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஈழத்தில் போர்நிறுத்த அறிவிப்பு வரும் என்னும் எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும்! “போரை நிறுத்து” என்னும் குரல் தமிழர்களிடம்! காங்கிரசிடம் அழுத்தம் தருகிறார் கலைஞர்! காங்கிரசோ மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. விடிய விடிய பொறுத்துப் பார்த்த முதல்வர் கலைஞர், ஏப்ரல் 27-ஆம் நாள் அதிகாலையில், அண்ணா அறிவாலயத்துக்கு செல்வதாகக் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்தில் வந்து அமர்கிறார்.

அப்போது நேரம் காலை 5 மணியைக் கடந்து ஆறு மணியை நெருங்குகிறது. முதலமைச்சர் திடீரென காலை வேளையில் வந்து, அண்ணா நினைவிடத்தில் அமர்ந்திருக்கிறாரே, நிலைமை என்னவென்று புரிய காவல்துறைக்கே சிறிது நேரமாகிறது. தகவல் கிடைத்ததும், கேமரா சகிதமாக அண்ணா நினைவிடம் நோக்கி விரைகின்றனர் ஊடகத்தினர். குவியத் தொடங்குகின்றனர் பொதுமக்கள், தொண்டர்கள்!

ஆங்காங்கு உண்ணாவிரதம் தொடங்குகின்றனர் திமுகவினர். அண்ணா நினைவிடம் வந்து சேர்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர். தலைவர்கள் நேரில் செல்கின்றனர். ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்கிற மனநிலையில் முதல்வர்! இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த நிலையை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும். 2009 ஜனவரி மாதம் - கூட்டணிகள் எல்லாம் முடிவாகாத சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜனவரி 10-ஆம் தேதி  நடத்த அழைப்பு விடுக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவர் அழைத்தால் சரியாக இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசும் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென பழ.நெடுமாறன் கூட்டத்தை ஒத்திவைக்கிறார்.

பெரியார் திடலில் சந்தித்த தலைவர்கள் மூவரும் (ஆசிரியர் கி.வீரமணி, மருத்துவர் ராமதாசு, தொல்.திருமா) ஜன-12 அன்று கலைஞரைச் சந்திக்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து என்ன செய்வது என விவாதிக்கிறார்கள். ”இனி என்ன செய்வது? எல்லாம் செய்தாகிவிட்டது. இனி நான் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்கிறார் கலைஞர். இந்த யோசனையை உடனடியாக மறுக்கிறார் ஆசிரியர் கி.வீரமணி. ”காந்தியவாதி மாதிரி பேசாதீர்கள்” என்கிறார் ஆசிரியர். சந்திப்பு முடிகிறது. சந்தித்த பின் வெளியே வந்த திருமா அவர்கள், கலைஞர் ஒரு மணி நேரமாவது உண்ணாவிரதமிருந்தால் பேரெழுச்சி வருமே என்கிறார். அன்றைக்கு நடப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்திருந்த கூட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக அவராலேயே அறிவிக்கப்படுகிறது. (காரணம் கலைஞரைச் சந்தித்துவிட்டு வருகிறார்கள் என்பது) அதன் பிறகு ஓரிரு நாளில் திருமா அவர்களே உண்ணாவிரதம் இருக்கிறார்.

ஆக, ”இறுதிக் கட்டமாக நான் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்பது கலைஞரின் யோசனை! மீண்டும் ஏப்ரல் மாதத்திற்கு வருவோம். போரின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது. போரில் பிரபாகரன் பிடிக்கப்பட்டால் போரஸ் மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறார் கலைஞர். பலருக்கும் வருத்தம். ”என்ன இந்த நேரத்தில் இப்படிச் சொல்கிறார்?, கலைஞருக்குப் பித்துப் பிடித்துவிட்டதா?” என்று எண்ணுகிறார்கள். நிலைமை மோசம் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போதும் இங்கே பலர் புலிகளையும், பிரபாகரனையும் ஏதோ கலைஞர் கொச்சைப் படுத்திவிட்டதைப் போலக் கருதுகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமடைகிறது.

அப்போது தான் ஒரு தரப்பான போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. சிங்கள இனவெறி அரசும் அறிவிக்க வேண்டுமென்ற குரல் வலுக்கிறது. எதையும் செய்ய முடியாத அடிமையாக இருக்கிறேனே என்ற புலம்பல் ஒரு மாநிலத்தின் முதல்வரிடமிருந்து! இது தான் இந்திய அரசின் தன்மை என்பதைப் புரியாதவர்கள் அரற்றுகிறார்கள்.

தாங்கொணாத ஆற்றாமை - கலைஞரை உண்ணாவிரதத்தை நோக்கித் தள்ளுகிறது.

அன்றைக்கு 86 வயதுக்காரர்!



அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி வந்து அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் தொடங்குகிறார்.  பொதுமக்கள் மத்தியில் ஊடகங்களின் பார்வையில் உண்ணாவிரதம் தொடங்குகிறது. நீண்டநேரம் அமரக்கூடாது என்ற மருத்துவர்களின் கண்டிப்பு காரணமாகப் படுத்துக் கொள்கிறார். உடன் அவரது உறவினர்கள். கொடும்வெய்யில் கொளுத்தும் சூழலில், அவருக்குப் பின்னால் அவருக்கு வழக்கமாக வைக்கப்படும் குளிரூட்டி வைக்கப்படுகிறது. அது திறந்த வெளி அரங்கம். வெய்யிலைத் தணிக்க அது சிறிதளவு பயன்படலாமே தவிர, சொகுசுக்குப் பயன்படாது.

மத்திய அரசுக்குத் தன்னால் தரமுடிந்த கடைசிக் கட்ட நெருக்குதல்! மத்திய அரசு இலங்கை அரசுக்குப் பேசுகிறது. உலக அரசுகளின் நெருக்குதல் இலங்கைக்கும்! ராஜபக்சே கூடிப் பேசுகிறார். கனரக ஆயுதங்கள், கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்திய அரசுக்கு இலங்கை அரசு தகவல் தருகிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கலைஞருக்குப் பேசுகிறார்.


அதை அறிவித்து, உண்ணாவிரதத்தைக் கலைஞர் முடித்துக் கொள்ளும்போது மணி 12:30 -அய்த் தாண்டியிருக்கும். (என் நினைவில் இருந்து சொல்கிறேன்.)

------- ---------

இப்படி கடைசிக் கட்டமாக, போரை நிறுத்த முடியாதா என்ற ஏக்கத்தின் காரணமாக, உணர்வால் உந்தப்பட்ட நிலையில் 86 வயது நிரம்பிய கலைஞர் தன் உடலை வருத்திக் கொண்டு இருந்த உண்ணாவிரதத்தைத் தான் நாடகம் என்கிறார்கள் இதயமற்றவர்கள்!

காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கி மாலை 5 மணிக்கு பழச்சாறு தந்து முடிப்பதற்குள் (7 மணிநேரம்) முப்பது தடவை ’ஒண்ணுக்கு’ இருக்கப் போவது போல் எதையாவது விழுங்கிவிட்டு வரும் போராளிகள் தான் பேசுகிறார்கள் - கலைஞரின் உண்ணாவிரதம் நாடகம் என்று!

காலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரை ஒரு முதியவர், கொடும் வெய்யிலில், பொது மக்கள் மத்தியில் உண்ணாமல் படுத்துக் கிடந்ததைத் தான் கேலி பேசுகிறார்கள் குறுக்குப் புத்திக்காரர்கள்!

நான் உண்ணாவிரதம் என்ற போராட்ட முறையை ஏற்காதவன். மதிய உணவை ஸ்கிப் செய்யும் உண்ணாவிரதம், ஆட்டுப்பால் குடித்து ஆறுமாதம் உண்ணாவிரதம் இருப்பது எப்படி என்று புக் போடும் அளவிலான காந்தியின் உண்ணாவிரதம், சாப்பிட்டுவிட்டு வந்த ஒருவர் சாப்பிடப் போக மற்றொருவரை எழுப்பிவிடும் தொடர் உண்ணாவிரதம், குளுக்கான் டி குடிக்கும் அன்னாஹசாரே உண்ணாவிரதம், கக்கூசில் போய் கட்டிக் கொண்டுவரும் அன்னாஹசாரே தொண்டர்கள் பாணி உண்ணாவிரதம் இப்படி உண்ணாவிரதம் என்பதையே கேலிக் கூத்தாக்கியவர்கள் இங்குள்ள போராளிகள்! சங்கரலிங்கனாரும், திலீபனும் செத்ததைப் போல இன்று யாரும் சாகவில்லை. வி.பி.சிங் போல உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள். (யாரும் அப்படி சாகக் கூடாது; உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் என் பார்வை)

ஒரு வேளை கலைஞர் செய்தது நாடகமே என்று கருதிக் கொண்டாலோ கூட, கலைஞரைக் குறை கூறும் முன், உங்களில் எத்தனைப் பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்துப் போனவர்கள். அல்லது உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள். அல்லது நாடகமாகவாவது நடத்திக் காட்டியவர்கள்.

திமுகவின் ஈழப் போராட்டம் குறித்துப் பேசும் போதெல்லாம், ‘அப்போ, கலைஞரின் உண்ணாவிரதம்?’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும், ‘ரெண்டு மணி நேரம் உண்ணாவிரதம்’ என்று நக்கல் பேச்சுப் பேசும் எத்தனைப் பேர் குறைந்தபட்சம் காலை உணவுக்கும், மாலை டிபனுக்கும் நடுவில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு ஏதாவது செய்தவர்கள்?

இப்போதும் கலைஞரின் உண்ணாவிரதம் நான்காமாண்டு நினைவு நாள் என்று நக்கலடிக்கும் யாருக்கும் அதற்கான தகுதி துளியுமில்லை! கலைஞர் ஈழத்துக்காக உணர்வுப்பூர்வமாக, ’ஆக்கப் பூர்வமாக’ச் செய்ததிலும், செய்ய முனைந்ததிலும் சிறிது கூட, இன்று அவரைக் கிண்டல் செய்யும் வேறு எந்த அரசியல்வாதியும் செய்ததில்லை. இனி, யார் கலைஞரின் உண்ணாவிரதம் பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு மரியாதையில்லை.

Related Posts with Thumbnails