2009 ஏப்ரல்: ஈழப் போர் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு தலையாக புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். மறு புறம் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இலங்கை சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. முழுவீச்சில் புலிகளை அழிக்கவும், அதனையே சாக்காக வைத்து தமிழர்களை அழிக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு - காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில்! அதுவரை போரென்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொல்லிவந்த ஜெயலலிதா (அதிமுக), டபுள் சிறீ ரவிசங்கர் காட்டிய படங்களைப் பார்த்ததும், ஈழத்தில்... சாரி... சாரி... இலங்கையில் நடந்து வந்த கொடுமைகளை அப்போது தான் உணர்ந்துகொண்டதாகக் கூறி, தனது ஈழ முகமூடியை அணியத் தொடங்குகிறார். அதுவரை கூடவே சுத்திக் கொண்டிருந்த செவ்வாழைகளும், புதிதாகப் போய்ச் சேர்ந்தவர்களும் சொல்லிப் புரியாததை டபுள் சிறீ ரவிசங்கர் சொல்லித் தான் தெரிந்துகொண்டாராம். சரி, போய்த் தொலைகிறது.
ஈழப்பிரச்சினைக்காக 2008 முதல் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டும் போராடிக் கொண்டுமிருந்த திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த ஆதரவுகள் சேருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வந்தால், ஏதோ ஈழத்தை அவர்கள் வாங்கித் தந்துவிட உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுத்தது போல இங்கிருக்கும் சிலர் பம்மாத்தும், சிலர் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று ’அம்மா’த்தும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஈழத்தில் போர்நிறுத்த அறிவிப்பு வரும் என்னும் எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும்! “போரை நிறுத்து” என்னும் குரல் தமிழர்களிடம்! காங்கிரசிடம் அழுத்தம் தருகிறார் கலைஞர்! காங்கிரசோ மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறது. விடிய விடிய பொறுத்துப் பார்த்த முதல்வர் கலைஞர், ஏப்ரல் 27-ஆம் நாள் அதிகாலையில், அண்ணா அறிவாலயத்துக்கு செல்வதாகக் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்தில் வந்து அமர்கிறார்.
அப்போது நேரம் காலை 5 மணியைக் கடந்து ஆறு மணியை நெருங்குகிறது. முதலமைச்சர் திடீரென காலை வேளையில் வந்து, அண்ணா நினைவிடத்தில் அமர்ந்திருக்கிறாரே, நிலைமை என்னவென்று புரிய காவல்துறைக்கே சிறிது நேரமாகிறது. தகவல் கிடைத்ததும், கேமரா சகிதமாக அண்ணா நினைவிடம் நோக்கி விரைகின்றனர் ஊடகத்தினர். குவியத் தொடங்குகின்றனர் பொதுமக்கள், தொண்டர்கள்!

ஆங்காங்கு உண்ணாவிரதம் தொடங்குகின்றனர் திமுகவினர். அண்ணா நினைவிடம் வந்து சேர்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர். தலைவர்கள் நேரில் செல்கின்றனர். ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
“எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்கிற மனநிலையில் முதல்வர்! இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்த நிலையை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும். 2009 ஜனவரி மாதம் - கூட்டணிகள் எல்லாம் முடிவாகாத சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜனவரி 10-ஆம் தேதி நடத்த அழைப்பு விடுக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவர் அழைத்தால் சரியாக இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசும் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், திடீரென பழ.நெடுமாறன் கூட்டத்தை ஒத்திவைக்கிறார்.
பெரியார் திடலில் சந்தித்த தலைவர்கள் மூவரும் (ஆசிரியர் கி.வீரமணி, மருத்துவர் ராமதாசு, தொல்.திருமா) ஜன-12 அன்று கலைஞரைச் சந்திக்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து என்ன செய்வது என விவாதிக்கிறார்கள். ”இனி என்ன செய்வது? எல்லாம் செய்தாகிவிட்டது. இனி நான் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்கிறார் கலைஞர். இந்த யோசனையை உடனடியாக மறுக்கிறார் ஆசிரியர் கி.வீரமணி. ”காந்தியவாதி மாதிரி பேசாதீர்கள்” என்கிறார் ஆசிரியர். சந்திப்பு முடிகிறது. சந்தித்த பின் வெளியே வந்த திருமா அவர்கள், கலைஞர் ஒரு மணி நேரமாவது உண்ணாவிரதமிருந்தால் பேரெழுச்சி வருமே என்கிறார். அன்றைக்கு நடப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்திருந்த கூட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக அவராலேயே அறிவிக்கப்படுகிறது. (காரணம் கலைஞரைச் சந்தித்துவிட்டு வருகிறார்கள் என்பது) அதன் பிறகு ஓரிரு நாளில் திருமா அவர்களே உண்ணாவிரதம் இருக்கிறார்.
ஆக, ”இறுதிக் கட்டமாக நான் தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்” என்பது கலைஞரின் யோசனை! மீண்டும் ஏப்ரல் மாதத்திற்கு வருவோம். போரின் இறுதிக் கட்டம் நெருங்குகிறது. போரில் பிரபாகரன் பிடிக்கப்பட்டால் போரஸ் மன்னனைப் போல நடத்தப்பட வேண்டும் என்கிறார் கலைஞர். பலருக்கும் வருத்தம். ”என்ன இந்த நேரத்தில் இப்படிச் சொல்கிறார்?, கலைஞருக்குப் பித்துப் பிடித்துவிட்டதா?” என்று எண்ணுகிறார்கள். நிலைமை மோசம் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டிருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போதும் இங்கே பலர் புலிகளையும், பிரபாகரனையும் ஏதோ கலைஞர் கொச்சைப் படுத்திவிட்டதைப் போலக் கருதுகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமடைகிறது.
அப்போது தான் ஒரு தரப்பான போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. சிங்கள இனவெறி அரசும் அறிவிக்க வேண்டுமென்ற குரல் வலுக்கிறது. எதையும் செய்ய முடியாத அடிமையாக இருக்கிறேனே என்ற புலம்பல் ஒரு மாநிலத்தின் முதல்வரிடமிருந்து! இது தான் இந்திய அரசின் தன்மை என்பதைப் புரியாதவர்கள் அரற்றுகிறார்கள்.
தாங்கொணாத ஆற்றாமை - கலைஞரை உண்ணாவிரதத்தை நோக்கித் தள்ளுகிறது.
அன்றைக்கு 86 வயதுக்காரர்!
அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி வந்து அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் தொடங்குகிறார். பொதுமக்கள் மத்தியில் ஊடகங்களின் பார்வையில் உண்ணாவிரதம் தொடங்குகிறது. நீண்டநேரம் அமரக்கூடாது என்ற மருத்துவர்களின் கண்டிப்பு காரணமாகப் படுத்துக் கொள்கிறார். உடன் அவரது உறவினர்கள். கொடும்வெய்யில் கொளுத்தும் சூழலில், அவருக்குப் பின்னால் அவருக்கு வழக்கமாக வைக்கப்படும் குளிரூட்டி வைக்கப்படுகிறது. அது திறந்த வெளி அரங்கம். வெய்யிலைத் தணிக்க அது சிறிதளவு பயன்படலாமே தவிர, சொகுசுக்குப் பயன்படாது.
மத்திய அரசுக்குத் தன்னால் தரமுடிந்த கடைசிக் கட்ட நெருக்குதல்! மத்திய அரசு இலங்கை அரசுக்குப் பேசுகிறது. உலக அரசுகளின் நெருக்குதல் இலங்கைக்கும்! ராஜபக்சே கூடிப் பேசுகிறார். கனரக ஆயுதங்கள், கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்திய அரசுக்கு இலங்கை அரசு தகவல் தருகிறது. இந்திய அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கலைஞருக்குப் பேசுகிறார்.

அதை அறிவித்து, உண்ணாவிரதத்தைக் கலைஞர் முடித்துக் கொள்ளும்போது மணி 12:30 -அய்த் தாண்டியிருக்கும். (என் நினைவில் இருந்து சொல்கிறேன்.)
------- ---------
இப்படி கடைசிக் கட்டமாக, போரை நிறுத்த முடியாதா என்ற ஏக்கத்தின் காரணமாக, உணர்வால் உந்தப்பட்ட நிலையில் 86 வயது நிரம்பிய கலைஞர் தன் உடலை வருத்திக் கொண்டு இருந்த உண்ணாவிரதத்தைத் தான் நாடகம் என்கிறார்கள் இதயமற்றவர்கள்!
காலை 10 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கி மாலை 5 மணிக்கு பழச்சாறு தந்து முடிப்பதற்குள் (7 மணிநேரம்) முப்பது தடவை ’ஒண்ணுக்கு’ இருக்கப் போவது போல் எதையாவது விழுங்கிவிட்டு வரும் போராளிகள் தான் பேசுகிறார்கள் - கலைஞரின் உண்ணாவிரதம் நாடகம் என்று!
காலை 5 மணி முதல் மதியம் 12:30 மணிவரை ஒரு முதியவர், கொடும் வெய்யிலில், பொது மக்கள் மத்தியில் உண்ணாமல் படுத்துக் கிடந்ததைத் தான் கேலி பேசுகிறார்கள் குறுக்குப் புத்திக்காரர்கள்!
நான் உண்ணாவிரதம் என்ற போராட்ட முறையை ஏற்காதவன். மதிய உணவை ஸ்கிப் செய்யும் உண்ணாவிரதம், ஆட்டுப்பால் குடித்து ஆறுமாதம் உண்ணாவிரதம் இருப்பது எப்படி என்று புக் போடும் அளவிலான காந்தியின் உண்ணாவிரதம், சாப்பிட்டுவிட்டு வந்த ஒருவர் சாப்பிடப் போக மற்றொருவரை எழுப்பிவிடும் தொடர் உண்ணாவிரதம், குளுக்கான் டி குடிக்கும் அன்னாஹசாரே உண்ணாவிரதம், கக்கூசில் போய் கட்டிக் கொண்டுவரும் அன்னாஹசாரே தொண்டர்கள் பாணி உண்ணாவிரதம் இப்படி உண்ணாவிரதம் என்பதையே கேலிக் கூத்தாக்கியவர்கள் இங்குள்ள போராளிகள்! சங்கரலிங்கனாரும், திலீபனும் செத்ததைப் போல இன்று யாரும் சாகவில்லை. வி.பி.சிங் போல உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள். (யாரும் அப்படி சாகக் கூடாது; உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் என் பார்வை)
ஒரு வேளை கலைஞர் செய்தது நாடகமே என்று கருதிக் கொண்டாலோ கூட, கலைஞரைக் குறை கூறும் முன், உங்களில் எத்தனைப் பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்துப் போனவர்கள். அல்லது உடம்பைக் கெடுத்துக் கொண்டவர்கள். அல்லது நாடகமாகவாவது நடத்திக் காட்டியவர்கள்.
திமுகவின் ஈழப் போராட்டம் குறித்துப் பேசும் போதெல்லாம், ‘அப்போ, கலைஞரின் உண்ணாவிரதம்?’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும், ‘ரெண்டு மணி நேரம் உண்ணாவிரதம்’ என்று நக்கல் பேச்சுப் பேசும் எத்தனைப் பேர் குறைந்தபட்சம் காலை உணவுக்கும், மாலை டிபனுக்கும் நடுவில் உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு ஏதாவது செய்தவர்கள்?
இப்போதும் கலைஞரின் உண்ணாவிரதம் நான்காமாண்டு நினைவு நாள் என்று நக்கலடிக்கும் யாருக்கும் அதற்கான தகுதி துளியுமில்லை! கலைஞர் ஈழத்துக்காக உணர்வுப்பூர்வமாக, ’ஆக்கப் பூர்வமாக’ச் செய்ததிலும், செய்ய முனைந்ததிலும் சிறிது கூட, இன்று அவரைக் கிண்டல் செய்யும் வேறு எந்த அரசியல்வாதியும் செய்ததில்லை. இனி, யார் கலைஞரின் உண்ணாவிரதம் பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு மரியாதையில்லை.