எப்போது என் கணினியை மறு தொடக்கம் (Restart) செய்வது என்பதை நான் முடிவு செய்வதில்லை. Shut down / Turn off எல்லாம் ஆண்டுக்கு ஓரிரு முறை நிகழ்ந்தாலே ஆச்சரியம் தான். பயணங்களுக்குத் தயாராகும்போதும், Hybernate / Sleep mode / Stand by இல் தான் மடிக்கணினிப் பைக்குள் புதையும். நான் உறங்கும்போது அதுவும் சற்று அயருமே தவிர, எந்நேரமும் அரைத் தூக்கத்தில் விழிப்போடு இருக்கும் வீட்டுக் காவலரைப் போல் தான் கடமையாற்றும்.
மறு தொடக்கம் செய்வதற்கு எனக்கொரு அளவுகோல் உண்டு. 'கண்ணைக் கட்டுது...கொஞ்சம் கேப் கொடுடா..!' என்று என் கணினி என்னிடம் சொல்வதற்கு மைக்ரோசாப்டுக்குத் தெரியாத மொழி ஒன்று உண்டு. மைக்ரோசாப்டுக்குத் தெரிந்த மொழி என்பது, 'கடுப்பாகி', அதுவே தானே மறுதொடக்கம் செய்வது! நான் சொல்வது அதற்கும் முந்தைய நிலை.
நான் பயன்படுத்தும் தமிழ் எழுதியை இயக்குவதற்கு F3 பொத்தானை அமுக்கினால், எப்போது தமிழ் எழுத்து வராமல், டொய்ங் என்ற ஒலியோடு Find பட்டி திறக்கிறதோ, அது தான் என் மடிக்கணினி எனக்குத் தன் அயர்வைத் தெரிவிக்கும் முதல் தருணம். அப்போது நான் கவனித்துவிட வேண்டும். எனினும் இரக்கமற்றவனாய், உடனே tamileditor.org பக்கத்துக்குத் தாவி, தமிழில் தட்டச்சத் தொடங்குவேன்.
இருந்தாலும் மறந்தவாக்கில் அடிக்கடி கை F3 யை அழுத்தி டொய்ங் என்ற சத்தத்துடன் என் தலையில் கொட்டுவிழும். அதற்குப் பிறகு கொஞ்சம் சுரணை வந்து, அல்லது இரக்கம் வந்து கணினியை மறுதொடக்கம் செய்ய நினைக்கும்போது தான், திறந்து வைத்திருக்கும் பல சாளரங்களிலிருக்கும் பாக்கிப் பணிகள் என்னை மிரட்டும். அவற்றில், படிக்க... பார்க்க வேண்டியவற்றை மட்டும் புக்மார்க்கிட்டோ, அல்லது உரலிகளை எடுத்து ஜிமெயிலில் அடுக்கியோ, மீண்டும் திறக்கும்போது பார்ப்போம் என்ற நம்பிக்கையில் சேர்ப்பேன். (அப்படிப் போட்ட பல உரலித் தொகுப்புகளால், என் ஜிமெயில் சுமார் அய்நூத்திச் சொச்சம் டிராஃப்ட்களோடு பிதுங்கி நிற்கிறது என்பது வேறு கதை) எஞ்சிய சாளரங்களிலிருக்கும் வேலைகள் முன்னுரிமை கொடுத்து முடிக்கப்படும்.
அப்படி இணைப்புகளையெல்லாம் ஜிமெயிலில் சேர்த்து முடிக்கும்போது, நிச்சயம் ஏதோ ஓர் அழைப்பு வரும் (இவ்ளோ காலம் அப்படித்தான். இப்போதும் அப்படித்தான்)... "அந்த மின்னஞ்சல் மட்டும் பார்த்துடுங்க... இந்த போட்டோ மட்டும் அனுப்பிடுங்க" என்று! பிறகென்ன அதை நோக்கிய ஓட்டம்... ஓடுகிற வழியில் கண்ணில் தட்டுப்படும் வேறு ஏதாவது ஒன்று நம்மை மீண்டும் கணினியை நோண்டச் செய்வது என்று இன்னும் கொஞ்ச நேரம் அலைக்கழிக்கப்படும். இதற்கெல்லாம் பழகி புளித்துப் போன என் கணினி, 'நான் வாக்கப்பட்டுவந்த இடம் அப்படி' என்று தன்னைத் தானே நொந்துகொண்டு கடைசி நேர ஒத்துழைப்பை வழங்கும்.
இப்போது ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தப் பதிவும் அப்படியொரு நிலையில் tamil editor மூலம் நான் எழுதிய பதிவு தான். எனவே தான் என் உயிரினும் மேலான இடத்தை என் கணினிகள் பெற்றிருக்கின்றன என்பதைச் சொல்லிக் கொண்டு... ("டேய்... restart பண்றியா... நான் பண்ணிக்கவா?" சாரி, என் கணினியின் குரல் தான்!) மறுதொடக்கம் செய்து மீண்டும் வருகிறேன்.
கருத்துகள்