முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட சின்னச் சின்ன அன்பில் தானே...

தொப்பிகளின் ரசிகன் நான்! 

காரைக்குடியில் இருந்தவரை காலை அணியும் தொப்பியை இரவு வீட்டுக்குத் திரும்பும் வரை கழற்றும் வழக்கம் இல்லை. விதம்விதமான தொப்பிகளின் மேல் எப்போதும் ஈர்ப்பு உண்டு. வழக்கமான முன் பக்கம் மட்டும் நிழல் தரும் தொப்பி, கிரிக்கெட் அம்பயர்கள் & சில வீரர்கள் பயன்படுத்தும் வட்ட வடிவ திடமாக நிற்கும் பட்டியுடைய நிழல் தரும் தொப்பி, இன்றைக்கு சேரன் உள்ளிட்ட சில இயக்குநர்கள் பயன்படுத்துவதைப்போல வட்ட வடிவமாக, ஆனால் மடங்கியிருக்கும் தொப்பி (எம்ஜிஆர் தொப்பியின் நவீன வடிவம்) என்று எல்லா வகையிலும் பல வண்ணங்களில் குறைந்தது 10 தொப்பிகளாவது வீட்டில் இருக்கும். 


குஷி படம் வந்த பின் வழக்கத்தை விட நீளமான வளைந்த முன்பகுதியுடனான தொப்பிகள் வரத் தொடங்கின. கார்த்திக் ஸ்டைல் தொப்பி அய்யாவுக்குப் பெரிதும் பிடிக்காவிட்டாலும், அதன் மேல் ஓர் ஆசை எப்போதும் உண்டு எனக்கு! இவை தவிர முன் பக்கம் கொஞ்சம் காற்றோட்டம் வரும் வசதியுள்ள சிங்கப்பூர் தொப்பி (அது என்ன அப்படி பெயர் என்றெல்லாம் கேட்கக் கூடாது; அப்போது அப்படி ஒரு தொப்பி சிங்கப்பூரிலிருந்து வந்தது. 


அதனால் அந்தப் பெயர்). மொட்டைத் தலையில் கவிழ்த்தது போன்ற நிழல் தரும் பகுதி இல்லாத ஆளவந்தான் தொப்பி, கிரிக்கெட் பார்க்கும் போது முன்பக்க நிழல் தரும் பகுதி மட்டும் கொண்ட தொப்பி போல பழையவற்றில் நாடாவோ, எலாஸ்டிக்கோ கோர்த்து நாங்களாக உருவாக்கிக் கொள்ளும் sun shade தொப்பி, பெரிய குதிரைக்காரன் தொப்பி என்று நினைவில் நிற்பவை மட்டும் இத்தனை ரகம்.


பள்ளி செல்லும்போதும், வரும்போதும், விடுமுறை வெய்யில் காலங்களில் கிரிக்கெட் விளையாடும் போதும் தேர்ந்தெடுத்து அணிந்துசெல்வது உண்டு. பள்ளி முடிந்து அழைத்துச் செல்ல வரும் அய்யா, கையோடு எனக்கும் தங்கைக்கும் இரண்டு தொப்பிகள் எடுத்து வந்திருப்பார். விளையாடும்போது கொஞ்சம் மறந்துவிட்டுக் கிளம்பினாலும், எதிரிலிருக்கும் மைதானத்திற்கு ஏழெட்டு தொப்பிகளைக் கொடுத்தனுப்புவார் அம்மா. அதில் நான் அணிந்துகொண்டது போக, உடன் விளையாடுவோருக்காக மற்ற தொப்பிகள். விளையாட்டு முடிந்ததும் பேட்கள், ஸ்டம்ப்கள், தொலைந்தது-கிழிந்தது போக எஞ்சியுள்ள பந்துகள், ஸ்டம்ப் ஊன்ற எடுத்துவரப்பட்ட கடப்பாறை ஆகியவற்றோடு தொப்பிகளையும் பத்திரமாகத் திருப்பி எடுத்துச் செல்லவேண்டும்.

மாநாடுகளில், ஊர்வலங்களில் தனித்து அடையாளம் காணும் வண்ணம் தொப்பி அணியும் வழக்கம் உண்டு. கருப்பு தொப்பியில் நடுவில் சிவப்பு வட்டம் போட்டுத் தைத்த தொப்பிகள் இருக்கும். குறைந்தது கருப்பின் நடுவில் சிவப்பு இருக்குமாறு தொப்பி இருக்கும். அல்லது பெரியார் படம், கழகக் கொடி பொறித்த பெரிய அளவிலான பேட்ச்சை எடுத்து தொப்பியில் குத்திவிடுவோம். இவை எங்கள் அய்யாவின் (சாமி சமதர்மம்) பணியாக இருக்கும். எங்கள் சிறுவயது புகைப்படங்கள் பெரும்பாலானவற்றில் தொப்பிகள் இல்லாதிருப்பது கடினம்.


தொப்பியைப் போட்டால் இரவிலும் கழற்றாமல் இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. (வியர்வை காரணமாக முடி ஒட்டிக் கொள்ளும்.) பள்ளிக்காலம் முடிந்து கல்லூரிகளிலும் என் அடையாளங்களில் ஒன்றாக தொப்பி இருந்திருக்கிறது. தொப்பி இல்லாவிட்டால் ‘என்ன தொப்பியைக் காணோம்’ என்று பிறர் கேட்கும் அளவிலானது அந்த அடையாளம்! இது ஒரு வேளை எங்கள் அய்யா தொப்பி அணியும் பழக்கத்தின் பாதிப்பாக இருக்கலாம். கைப்பையுடன் தொப்பியும் பிடித்தபடி மறந்திடாமல் கிளம்புவார். தவறினாலும்,வண்டியைக் கிளப்பும்போதே தொப்பிய மறந்திட்டிங்க என்று யாராவது நினைவுபடுத்தும் முன் தொப்பியைக் கேட்டுவிடுவார் அய்யா. 

சென்னைக்கு வந்து அதிகம் தொப்பி அணியும் சூழல் அற்றுப்போன பின்னும் ஆசைக்கு அவ்வப்போது புது வடிவ தொப்பிகள் வாங்குவதுண்டு. புத்தாடைகள் எடுக்கும்போது, கண்டிப்பாக ஒரு சில தொப்பிகளும் அவற்றில் அடங்கும். கடந்த பத்து ஆண்டுகளில் அதில் ஒன்று சேகுவேரா ஸ்டைல் தொப்பியாக இருக்கும். வழக்கம் போல கருப்பு வண்ணத்தில் சிவப்பு நட்சத்திரமோ, வேறு வடிவங்களோ கொண்ட தொப்பிகளாக இருக்கும். இவை அய்யாவுக்காக நான் தேர்ந்தெடுத்தவை!

நான் எனக்கென வாங்கும் தொப்பிகளை படப்பிடிப்புக்கோ, சுற்றுலாவுக்கோ நான் செல்லும் நாட்களில் பயன்படுத்துவதற்காக என்று வைத்திருப்பேன். ஹெல்மெட் அணியக் கட்டாயப்படுத்தப்படும் காரணத்தால் வெளியில் செல்கையில் தொப்பி பயன்படுத்த முடிவதில்லை. சென்னைக்குள் பேருந்து, தொடர்வண்டிப் பயணங்கள் என்றால் அப்போதும் தொப்பி அவசியப்படாது. இப்படியாக தொப்பி பயன்படுத்தும் அளவு குறைந்து போனதால், காரைக்குடியில் என் அடையாளமாக இருந்த தொப்பியின் முக்கியத்துவம் சென்னை நண்பர்களுக்குத் தெரியாது!


ஆசிரியர் 80-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவின் போது நான் மட்டும் ஆசிரியர் படத்துடன் 80-ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்த தொப்பியை அணிந்திருந்தேன். பலர் இது ”என்ன எங்களுக்குக் கிடைக்கல? நீங்க எங்க வாங்கினீங்க” என்றனர். இன்னும் பலர் ”என்ன தொப்பி  போட்டிருக்கீங்க? நான் யாரோன்னு நினைச்சேன்” என்றனர்(!?) 

விழாவுக்காக காரைக்குடியிலிருந்து சென்னை வந்த எங்கள் அய்யா கையோடு இரண்டு தொப்பிகள் எடுத்து வந்திருந்தார் (எனக்கொன்று - தம்பி புருனோவுக்கொன்று). ஆசிரியரின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு நானே வடிவமைத்து, தொப்பி வெளியிடவேண்டும் என்று அடம் பிடித்ததால், விழாக் குழுவின் சார்பில் அவசரம் அவசரமாக தயாரித்து விற்பனை செய்யப்பட்ட தொப்பி தான் அது! ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தவற்றில் பயன்படுத்தப்படாமல் இருந்த இரண்டு புதிய தொப்பிகளில் 75 என்ற இடத்துக்கு மேல் வெள்ளை நிற நீர் வண்ணத்தில் 80 என்று திருத்தி எழுதிக் கொண்டு வந்திருந்தார் அய்யா! அன்று பெரியார் படமும் கொடியும் போட்ட பேட்ச் குத்திக் கொடுத்த அதே உணர்வுடன் ஆசிரியர் பிறந்தநாளுக்குப் புதுத் தொப்பி தந்தார்! 


ஆசை தீர அன்று முழுவதும் தொப்பியுடன் அலைந்தேன் நான். ”எங்க வாங்கினீங்க?” என்று மாணவரணிச் செயலாளர் இளந்திரையன் கேட்டபோது, ’எனக்காக என் அய்யா செய்தது’ என்று சொன்னதில் அணிந்திருந்த எனக்கு சின்னப் பிள்ளையாக ஒரு மகிழ்ச்சி; ’என் பையனுக்காக நான் செய்தது’ என்பதில் அய்யாவுக்குப் பெருமிதம். ’உனக்கு அய்யா ஏதோ தொப்பியெல்லாம் செஞ்சு எடுத்துட்டு வந்தாங்களாம்?’ என்று தொலைப்பேசியில் கேட்ட தங்கையின் கேள்வியில் குட்டியூண்டு பொறாமை.

” ...... .......... ....... - அட
சின்னச் சின்ன அன்பில் தானே 
ஜீவன் இன்னும் இருக்கு!”
............................. ..................................... ...........................

இதோ, இன்று அதே தொப்பியுடன் கிளம்புகிறேன்... இராஜபாளையத்தில் நடக்கும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டுக்கு! 

நன்றி அய்யா!

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தொப்பி ரசனை அருமை...

முடிவில் இனிமையான பாட்டு...

வாழ்த்துக்கள்...
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யா திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வணக்கம். அண்மையில் தான் உங்களுடன் எனக்கு அறிமுகம். ஆனால், என்றைக்கோ என் எழுத்தைப் பாராட்டியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam