கார்களில் கருப்பு பிலிம்களை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். எனக்கு இந்த உத்தரவில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
தீவிரவாதிகள், கொலை, கொள்ளையர்களைப் பிடிக்க வாகன சோதனைகள் இருக்கின்றன. கருப்பு பிலிம்களை அகற்றுவதன் ஊடாக எதைப் பார்த்து கண்டுபிடித்துவிட முடியும் - உள்ளிருப்போரின் தனிமையைக் கெடுப்பதைத் தவிர? மற்ற வாகனங்கள் அனைத்தையும் விட உயரம் குறைவானவை மகிழுந்துகள். அவை மகிழுந்துகளாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதில் உள்ள privacy என்பது என் கருத்து. அதுவும் குடும்பத்தோடு செல்லும்போது, சிரிப்பு, மகிழ்ச்சி, கிண்டல் என செல்லும் தருணங்களை ரசித்தவர்களுக்கு அத்தனை பேரும் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் காரணத்தால் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வரும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாது.
போக்குவரத்து சிக்னல்கள், நெருக்கடிகள் உள்ள இடங்களில், வண்டி ஓட்டுபவரைத் தவிர மற்ற அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் தருணங்களுக்கு இந்த நடவடிக்கை கடுப்பைத் தரக்கூடியது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு குடும்பத்துடன் மகிழுந்தில் செல்லவில்லை என்றாலும், சாலையில் செல்லும் போது கார்களில் செல்லும் பிறரைப் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது - அவர்களின் தனிமையைத் திருடுவதைப் போல! சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் நடிகர், நடிகைகள், கொண்டாடப்படுவோர் (Celebrity) போன்றோர் வெகு இயல்பாக வெளியில் சென்றுவர உதவும் ஒரே வாகனம் அது தான்! இனி அதுவும் பாதிக்கப்படும்!
அது மட்டுமல்ல... கண்ணாடியையும் தாண்டி வெயில் சுடும்போது தடுப்பதற்கு அவை தான் உதவும். ஜன்னலோரம் அமர்ந்து வரும் வேளையில் ஏ.சி.யெல்லாம் ஒன்றும் பலனளிக்காது; சூடு உடலில் பட்டு நீர்கடுப்பு வேறு வந்து தொலைக்கும். கடந்த முறை பெங்களூர் செல்லும்போது நான் அமர்ந்த பக்கம் வெய்யில் அடிக்க, மடியில் துணியைப் போட்டுக் கொண்டே பயணித்தேன். காரணம் இந்த கருப்பு பிலிம்கள் இல்லாமை தான்!
இப்படி உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உயர் பாதுகாப்பு என்ற பெயரில் இவையெல்லாம் பொருந்தாது.
* சாலையோரங்களில் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்கிற நகரத்தில், நாட்டில்.. நீ ஏண்டா காரில் போகிறவனின் பிரைவசியைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நீ என்ன பூர்ஷ்வாவா?
* பொது இடத்தில் போகும்போது என்ன பிரைவசி வேண்டிக் கிடக்கிறது?
என்பன போன்ற கேள்விகள் பலருக்கும் எழலாம். சிலர் திட்டலாம்.. அதெல்லாம் தெரிந்துதான் கேட்கிறேன்.
* அதிலும் எத்தனை சதவிகிதம் கருப்பு இருக்கலாம் என்று சிலர் கேட்டதில் குழப்பம். பின்னர் சதவிகிதமெல்லாம் கிடையாது. மொத்தமாக எடுத்துவிடவேண்டும். உள்ளே ஸ்கிரீன் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் என்ற சிலரின் வியாக்கியானம்.
ஒரு வேளை இது நல்ல விசயமாக இருந்து, நான் அதை ஏதோ ஒரு காரணத்துக்காக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கக்கூடாது அல்லவா? எனவே நீதிமன்ற நடவடிக்கை சரி என்று தோன்றுபவர்கள் அதற்கான காரணத்தை அடுக்கி, என்னை/ என் போன்று நினைப்போரை சமாதானப்படுத்த முயலவும்/ புரியவைக்க முயலவும்!
இதனை நான் முகநூலில் பதிந்தபோது வந்த சில கமெண்டுகள் முக்கியமானவை:
கருத்துகள்
தவறை தடுக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்கிறது அரசாங்கம் அது சிலருக்கு உபத்திரமாக் இருக்கு. சன் பிலிம் கண்டுபிடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தோம்? அதையும் யோசிக்கவேண்டும்.
வடபழனி சிக்னலில் இருக்கும் போக்குவரத்து போலிஸ் கையை ஆட்டி தான் போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறார்கள் ஏனென்றால் நம் நிலமை இப்படித்தான் இருக்கு என்ன செய்வது?
உச்சநீதி மன்றத்திலேயே மேல் முறையீடு செய்யனும்.
இந்தியா போன்ற ஆண்டுக்கு 10 மாசம் கடும் வெயில் அடிக்கும் தேசத்தில் இப்படியான சட்டங்கள் மக்களுக்கு சோதனையே.
எப்படியும் இந்த விதியை மாத்திடுவாங்கன்னு இன்னும் ஃபில்ம் எடுக்கவில்லை.