இந்தக் கட்டுரையை நான் எழுதத்தொடங்குகிற இந்த நொடியோ (11:59:14 - 20.10.2011), அல்லது எழுதத் தோன்றிய 16-ஆம் தேதி இரவோ எந்த விதத்திலும், பிரச்சாரத்திற்கோ ஒரு ஓட்டிற்கோ கூடப் பயன்படப் போவதில்லை; அந்த நோக்கமும் இல்லை.
ஏன், எழுதும் நான், என் ஓட்டைக் கூடத் தர முடியாதவன்... சென்னை மாநகராட்சிக்கு! (காரைக்குடிக்குச் சென்று 19-ஆம் தேதி வாக்கிட்டுவிட்டு வந்துவிட்டேன்) வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் மீதான வெறுப்பையும் தாண்டி, மக்களின் ஆதரவு என்னும் பேரலை இவருக்குச் சாதகமாக இருப்பினும், சென்னை மாநகராட்சியை எப்பாடுபட்டேனும் கைப்பற்றியே தீருவது என்ற வெறியில், இவரது வெற்றி ஆளுங்கட்சியினரால் தட்டிப் பறிக்கப்படலாம். ஆனாலும் என் நன்றியைத் தெரிவிக்கும் நோக்கம் ஒன்றே என்னை எழுதத் தூண்டுகிறது.
நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்காமல், மாநகராட்சி உறுப்பினர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கடந்த 2006-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அப்படி சென்னை சைதையிலிருந்து தி.மு.க.வின் சார்பில் மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, பின்னர் மாநகரத் தந்தை ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மா.சு என்கிற மா.சுப்பிரமணியன்.
சென்னையின் பெரும் மாற்றங்களுக்குக் காரணமாயிருந்த தளபதி மு.க. ஸ்டாலினின் காலத்திற்குப் பிறகு (1996-2001), மீண்டும் அவரே மாநகராட்சிக்கு 2001-இல் வென்ற நிலையில், அன்றைக்கு ஆட்சியில் அமர்ந்த ஜெ-யும் அவரது அடியாளாக காங்கிரசிலிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்திருந்த கராத்தே தியாகராஜன் போன்றோரும் கொடுத்த குடைச்சல், துணை மேயர் என்னும் பெயரில் அடித்த கூத்து, பின்னர் கராத்தேவைப் போட்டுத் தள்ளத் தயாரான முதல்வர் ஜெ-யின் செயலால் அவர் தப்பியோடி வடநாட்டில் மறைந்த மர்மம் என சீர்கெட்டுப் போயிருந்த சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டிய மாபெரும் பணியைத் திறம்பட செய்து முடித்தவர் மா.சுப்பிரமணியன்.
பெரியார் கொள்கைப் பற்று, திராவிட இயக்கச் சிந்தனை, கலைஞரின் மீதான பாசம் என பக்கா தி.மு.க.காரர்! சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியும் தி.மு.க. காலத்தில் மட்டுமே செய்யப்பட்டது என உறுதியாகச் சொல்ல முடியும். அதனாலேயே தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் சென்னையை இன்னும் சிறப்பாக நிர்வகித்த பெருமையும் மா.சு அவர்களுக்கு உண்டு. எளிமை, பழகுதற்கு இனிமை, மக்கள் எவரும் சென்று சந்திக்கும் அளவு இயல்பான பண்பு இவருடையது.
ஜீ தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில், தொலைபேசியில் குறை தீர்க்கும் நிகழ்ச்சிக்காக நேயர்கள் உரையாடும் போது, தெருப் பெயரைச் சொன்னவுடனேயே, அங்கே என்ன பிரச்சினை? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எப்போது சரியாகும்? என பதில் சொல்லி நிகழ்ச்சித் தொகுப்பாளரையே வியக்க வைக்கும் அளவு சென்னையின் நீள அகலங்களைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்தவர்.
கூவம் கால்வாய்ச் சீரமைப்புத் திட்டம், சென்னையெங்கும் பூங்காக்கள், போக்குவரத்தைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கன. ஆனால், அவற்றையெல்லாம் விட என்னை ஈர்த்தவை சில.
தனியார் பள்ளிகள் தான் தரத்தில் சிறந்தவை என்ற மாயையை அகற்றி, சென்னை மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறமுடியும்; முதலிடத்தைப் பிடிக்க முடியும் என்னும் அளவிற்கு பள்ளிகளின் தரத்தைத் தூக்கிப் பிடித்தது முக்கியமானது.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் வைத்தால் தங்க மோதிரம் அணிவித்து அவர்களை ஊக்கப்படுத்தியது இன்னொன்று. ’நல்ல தமிழ்ப்பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்’ என்று சொல்லுவதோடு அல்லாமல் அதற்கொரு பரிசும் கொடுத்து அதற்கொரு பயனையும் தந்தது அத்திட்டம்.
சென்னை சாலைகளின் இரு பக்கச்சுவர்களிலும் தமிழர் தம் பண்பாட்டையும், வரலாற்றையும் பறைசாற்றும் வண்ணம், இயற்கைக் காட்சிகளும், தமிழகத்தின் வளங்களும் தலைநகருக்குப் பெயர்ந்துவிட்டதோ என்று வியக்கும் வண்ணம் வண்ண ஓவியங்களை மிளிரச் செய்து, வழமையான அலுத்துப் போன சென்னை வாழ்க்கையில் இருந்து சென்னை மக்களுக்கே புத்துணர்வான மனமாற்றத்தைத் தந்தவர் மா.சு! (பெங்களூருவில் இருந்ததைப் போலத் தான் இந்தத்திட்டம் பின்பற்றப்பட்டது என்றாலும், அங்கிருந்த மொக்கையான ஓவியங்களை ஒப்பிடுகையில் அழகுணர்ச்சியோடு அதைச் செய்தவர் நமது மேயர் என்று பெருமையாய்ச் சொல்லாம்.
”வாணிகர்,தம் முகவரியை வரைகின்ற பலகையில்,ஆங் கிலமா வேண்டும்?
'மாணுயர்ந்த செந்தமிழால் வரைக' என அன்னவர்க்குச் சொல்ல வேண்டும்!
ஆணிவிற்போன் முதலாக அணிவிற்போன் ஈராக அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல் நந்தமிழின் நலம்காக்கும் செய்கையாமோ?
உணவுதரு விடுதிதனைக் 'கிளப்'பெனவேண் டும்போலும்! உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு 'சில்குஷாப்' எனும்பலகை தொங்குவதால் சிறப்புப் போலும்!
மணக்கவ ரும் தென்றலிலே குளிராஇல்லை? தோப்பில் நிழலா இல்லை?தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தா னில்லை!”
என்றெழுதிய புரட்சிக் கவிஞர் போல், ’தமிழ் இருக்காதா எம் தலைநகர்த் தெருவினில்’ என்று வருந்திக் கொண்டிருந்த வேளையில், விதிமுறையை நெருக்கி, ”ஆக்ஸ்போர்டு பிரஸ்’ என்றாலும் தமிழில் எழுது” என்று பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து, பாதையோரக் கடை வரைக்கும் தமிழில் பெயர்ப்பலகை எழுத வேண்டும் என்பதை நடைமுறைக்குக் கொண்டுவந்து வெற்றிகண்ட பெருமை சர்வ சந்தேகமில்லாமல் மா.சுப்பிரமணியன் அவர்களைத் தான் சாரும்.
”தமிழை எங்கே தேடுவேன்?” என்று பாடல்கூட வெளிவந்து இணையதளங்களில் உலவியது.
ஆனால், ஆங்கில எழுத்துகளை தமிழில் மாற்றி Transliteration செய்தால் மட்டும் போதாது. நல்ல தமிழில் மொழியாக்கம் செய்து ‘இனிப்பகம்’, ‘வெதுப்பகம்’, ’தொலை தொடர்பகம்’ என்று தமிழ் எழுத்துருவைக் கேள்விப்படாத பன்னாட்டு நிறுவனங்கள் கூட, அதிகம் அழகில்லாத ’ஒருங்குறி’ எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ்ப்பெயர்ப் பலகை வைக்க வேண்டிய அளவு நடைமுறையில் உறுதியாக இருந்து சாதித்தும் காட்டியது மனமுவந்து பாராட்டத்தக்கது. இன்னும் சில இடங்களில் அப்படித் தான் இருக்கிறது என்று குறைப்படவும் கூடும். மறுக்கவில்லை. ஆனால் ஓரிரண்டு வீதம் தவிர முழுமையான வெற்றி என்றே சொல்லவேண்டும். தமிழில் கட்டாயப்படுத்தி எழுதச் செய்தாலும், அழகைக் கெடுப்பதாகக் கருதி அதை வெறுப்போடு எழுதியவர்களே பின்னர் ரசிக்கும்படி இருந்த இன்பத்தைத் தந்தவர் நம் மா.சு அவர்கள்!
மதராஸ் என்றிருந்ததை மாற்றி ’சென்னை’ என்று சொல்ல வைத்த கலைஞரைப் போல, சென்னையின் தெருக்களில் தமிழ் கிடந்து தள்ளாடும் என்றிருந்த ’மாசு’ தனை அகற்றி தமிழ் செழிக்க வைத்த ’மா.சு’ அவர்களே, உங்களை நாளும் நன்றியோடு நினைவுகொள்கிறேன். இன்னும் நிறைய இருக்கிறது இவரைப் பாராட்டி எழுத! (8 மணிக்காவது நான் பதிவை முடிக்க வேண்டாமா?)
இன்று வெளிவரும் முடிவுகள் எப்படியும் இருக்கலாம். சென்னை மக்கள் மட்டுமல்ல... உணர்வுள்ள தமிழர்கள் எங்கிருப்பினும் உம்மை நன்றியோடு நினைப்பார்கள்! சென்னை மாநகராட்சிக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உங்கள் பணி தேவைப்படுகிறது வாருங்கள்!
பின்குறிப்பு: சென்னை மாநகராட்சிக்கு இன்றியமையாத இன்னொரு பணியும் உண்டு... அதை வெற்றிபெறுபவரின் கவனத்துக்கு வைப்போம் - மாநகரைக் காக்க!
கருத்துகள்