அண்ணன் டி.வி.எஸ்.சோமு அவர்களின் வாட்ஸ் அப் பதிவுக்கு (பேஸ்புக்கிலும் போட்டுள்ளார் - https://www.facebook.com/reportersomu/posts/1945338828943651) நான் இட்ட பதில் இங்கே தொகுத்துத் தரப்படுகிறது.
//என் நண்பன் சொன்னது:
"ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த நான், என் சாதிக்கான இட ஒதுக்கீட்டில் படித்தேன்; உதவித்தொகை வாங்கினேன்; அரசு வேலையில் சேர்ந்தேன்: பதவி உயர்வு பெற்றேன்.
ஆனால் என் சாதி இழிவானது என எண்ணினேன்; ' உயர் சாதி' என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த 'இழிவு' நீங்கும் என 'காதலித்து ' மணம் புரிந்தேன்.
இப்போதுதான் உணர்கிறேன்... எனக்கு கல்வி வேலை, பதவி உயர்வு, வாழ்க்கை அளித்த என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?!" என்றார்.
அவரது கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை!
- டி.வி.எஸ். சோமு//
என் பதில்:
சரி, தவறு என்பதை படிப்போர் முடிவு செய்து கொள்ளுங்கள். அண்ணன் சோமு அவர்களின் நண்பர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளைக் குறிப்பிடுகிறேன்.
சரி, தவறு என்பதை படிப்போர் முடிவு செய்து கொள்ளுங்கள். அண்ணன் சோமு அவர்களின் நண்பர் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளைக் குறிப்பிடுகிறேன்.
1. “என் சாதி இழிவானது என எண்ணினேன்.” - என்பது அவர் கருத்து.
நம் கருத்து: என் ஜாதி இழிவானது என்று அவர் கருதியது தவறு. ஜாதியே இழிவானது என்பது தான் சரி. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்து பேதம் பார்க்கும் ஜாதி முறைதான் இழிவானது. பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைத்து ஜாதியினரையும் இழிந்த பிறவிகள் என்று தான் இந்துமதம் சொல்கிறது. எனவே, பார்ப்பனர்களைத் தவிர பிறர் யாரும் ஜாதியினால் பெருமை அடைய முடியாது.
2. ‘உயர்சாதி’ என நம்பப்படும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் இந்த ’இழிவு’ நீங்கும் என காதலித்து ‘மணம் புரிந்தேன்’. - அவர் கருத்து
நம் கருத்து: ஜாதி முறையை ஏற்றுக் கொள்ளும்போது தான் நாம் கீழ்ஜாதி, மேல்ஜாதி என்னும் எண்ணம் உறுதிப்படும். என் ஜாதி இழிவானது என்று எண்ணியதால் தான், அதிலிருந்து தப்ப உயர்ஜாதி எனப்படும் ஒருவரைத் திருமணம் செய்ததாகத் தெரிவிக்கிறார். இது புரிதல் கோளாறு.
ஜாதி மறுப்புத் திருமணங்கள், ஒரு ஜாதியின் இழிவிலிருந்து தப்புவதற்காக உயர்ஜாதியினரைத் திருமணம் செய்வதல்ல. ஜாதிமுறை என்னும் இழிவை ஒழிப்பதற்கான முன்னெடுப்பாக நடைபெறவேண்டியவை.
ஜாதி முறையை ஏற்றுக் கொண்டால், ஒருவரால் ஒருபோதும் ஜாதியிலிருந்து தப்ப முடியாது. அவர் அந்த ஜாதியில் தான் சாகும் வரைக்கும், செத்தபிறகும் அடையாளப்படுவார். எனவே, ஜாதி முறையை மறுத்து திருமணம் செய்கிறோம் என்ற எண்ணம் தோன்றினால் தான் உங்களால் ஜாதி இழிவிலிருந்து விடுபட முடியும்.
3. .... என் சாதியிலேயே திருமணம் செய்திருந்தால், அதே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் அல்லவா?” - அவர் கருத்து.
நம் கருத்து: ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த இன்னொரு குடும்பமும் முன்னேறி இருக்கும் என்ற காரணத்தால் தன் ஜாதியிலேயே திருமணம் செய்துகொண்டிருக்கலாம் என்று கருதுகிறார் எனில் அவருடைய இந்த கருத்தும் தவறானது. தன் ஜாதியைச் சேர்ந்தவர்களை, அல்லது ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து தான் முன்னேற்றம் செய்வது என்றால், எத்தனை பேரைத் திருமணம் செய்வது? அல்லது ஆயுள் முழுக்க ஒரே ஒரு குடும்பத்தை மட்டும் முன்னேற்றினால் போதுமா? அது தன் குடும்பம் என்பதால் முன்னேற்றும் நடவடிக்கையா? இல்லையா? அதற்கு ஒடுக்கப்பட்ட ஜாதியை முன்னேற்றுதல் என்று நாம் பூச்சு வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள், அதற்கான உரிமையை இடஒதுக்கீடாகவோ, கல்வி உதவித் தொகையாகவோ அல்லது இன்ன பிற வகைகளிலோ பெற்று வளர்ந்தவர்கள், தன் சமூகத்துக்குத் திரும்பச் செய்யவேண்டியது கடமை. அவ்வாறு அவர் எண்ணுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதற்கு அவர் தெரிவித்த முறை தீர்வல்ல.
தன்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனைவரும் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப் பதவிகளைப் பெறுவதற்காக வழிகாட்டுவதும், போராடுவதும், அதற்காக தன்னால் இயன்றவரை நேரத்தை, உழைப்பை, சிந்தனையை, வாய்ப்பிருந்தால் சிறிதளவேனும் பணத்தைச் செலவு செய்வதும் சரியான முறைகள். தனிப்பட்ட ஒரு சிலருக்கான உதவிகளுக்கு எல்லை உண்டு. அவை அவசியமானவையே என்றாலும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் மாற்றத்தை ஏற்படுத்தும்வகையில் கருத்துகளை உருவாக்குதல், அதற்காக உழைப்போரை ஊக்குவித்தல், நாமும் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் மிகப் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். அதுதான் சமூகத்துக்குச் செய்யவேண்டுவது.
4. ஜாதி முறையை எதிர்க்காமல், எதிர்கொள்ளாமல், அதன் இழிவிலிருந்து முற்றாக விடுபடாமல், ஏதோ ஒருவகையில் ஜாதியை ஏற்றுக் கொண்டு எந்த ஒரு தனி நபராலும், எத்தனை பூச்சுகளாலும் சுய ஜாதி இழிவிலிருந்து வெளிவர முடியாது. தான் மட்டும் ஏதோ ஒரு நடவடிக்கையின் மூலம் இழிவிலிருந்து வெளியேறலாம் என்ற எண்ணமோ, அல்லது ‘ஜாதிப் பெயர் மாற்றங்கள்’, ‘நாங்கள் ஆண்டஜாதி போன்ற பேச்சுகள்’ மூலமோ இழிவை நீக்கிக் கொள்ளலாம் என்பதும் ஏமாறும் செயலே... அல்லது பிறரை ஏமாற்றும் செயலே!
கருத்துகள்