சும்மா ஆரியம், திராவிடம் என்று ஓட்ட முடியாது என்பதால் தளபதி தனது பிறந்தநாளை வேறு (கார்ப்பொரேட்) பாணியில் அய்.நா. மன்றம் அறிவித்துள்ள தேதிகளின்படி ஒரு நாளைக் குறிப்பிட்டு கொண்டாடியுள்ளாராம். சொல்லி சந்தோசப்படுகிறது குமுதம் ரிப்போர்ட்டர்! அதாவது திராவிட இயக்கக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டார்கள் என்பது தான் குமுதம் சொல்ல வருவது!
அட, புத்தியற்ற பார்ப்பனியமே! தளபதி ஸ்டாலின் தன் பிறந்தநாளையொட்டி கொண்டாடியது என்ன தெரியுமா? ”பாகுபாடு ஒழிப்பு நாள் - Zero Discrimination Day”. திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவமும், அது தோன்றக் காரணமுமே அது தானே! பாகுபாடுகளை ஒழிக்க வேண்டுமென்பதை உறுதியேற்பாகவே நிகழ்த்திக் காட்டியிருப்பது அதன் செயல்பாட்டின் இன்னொரு பரிமாணம் (Dimension) அல்லவா?
தன்னுடைய உரையிலும் தளபதி ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது என்ன?
”சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. நம்முடைய தலைவர் கலைஞரின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1-ம் நாள் இருந்திட வேண்டும். பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும். நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது.
மார்ச் 1-ம் தேதியை பாகுபாடு ஒழிப்பு தினமாக ஐ.நா சபை கொண்டாடுகிறது. எனவே, பாகுபாடுகளை ஒழிக்க நாம் சபதம் ஏற்க வேண்டும். பாகுபாடு காட்டாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். எல்லோர் உடலிலும் ஒரே மாதிரியான ரத்தம்தான் ஓடுகிறது. கடவுள் நம்பிக்கையுடையவர்களின் ரத்தம் கடவுள் நம்பிக்கையற்றவர்களை வாழ வைக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் ரத்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்களை வாழ வைக்கும். எனவேதான் இந்த மாதம் முழுவதும் ரத்த தானம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.” (தினத்தந்தி 02.03.2015)
இதைத் தானே தொடர்ந்து திராவிட இயக்கம் வலியுறுத்தி வருகிறது. அதையே நவீன வடிவத்தில் செய்திருக்கிறார் தளபதி!
உங்கள் ஆசையெல்லாம் நடக்காது பூணூல்களே! பாகுபாடுகளை ஒழிக்கப் புறப்பட்டது தான் திராவிட இயக்கம். வெறும் நேம் பிளேட் மாட்டிக் கொண்டு அலைவதல்ல. செயலில் காட்டவேண்டும். அப்படி செயல்பட்டால் தான் திராவிட இயக்கம். அதைத் தான் தன் பிறந்தநாளில் புது வடிவில் செய்துகாட்டத் தொடங்கியிருக்கிறார் தளபதி ஸ்டாலின். வாழ்த்துகள் தளபதி - தொடர்ந்து எதிரிகளின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, சமத்துவ சமுதாயத்திற்கான பாதை அமையுங்கள்.
பின்குறிப்பு: நிறம், மதம், மொழி, நம்பிக்கை, விருப்பம் என அனைத்துப் பாகுபாடுகளும் வரிசைப்படுத்தப்பட்ட அந்த விளம்பரத்தில் குறிப்பாக ஜாதி விடுபட்டுள்ளது. அதனைத் தன் உரையில் முதன்மையாகக் குறிப்பிட்டு தளபதி தெளிவுபடுத்தியிருந்தாலும், விளம்பரத்திலும், தொடர்ந்து ஏற்கப்படும் உறுதிமொழியிலும் அதனை இடம்பெறச் செய்வது அவசியமாகும்.
கருத்துகள்