”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்று காப்பியடித்தாரா பெரியார்?
”பெட்ரண்ட் ரசலின் Marriages and Morals நூலைத் தான், தமிழில் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெயரில் காப்பியடித்தார் பெரியார் என்று ஓர் அரைவேக்காடு எழுதியிருக்கிறது. அதை எப்படியும் நாளை காலைக்குள் ஆயிரக்கணக்கான முட்டாள்கள் பகிரப் போகிறார்கள். சங் பரிவாரின் காலைநக்கும் கும்பல் அதை மீம்சாக்கி பரப்பப் போகிறார்கள். போர்டு தாஸ் மாதிரியான கூலிகள் வீடியோவும் போடுவார்கள்.
நாம் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லி வைப்போம்.
“பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலில் உள்ள கருத்துகள் பெரியாருக்குத் திடீரென்று ஒரே நாளில் தோன்றி எழுதப்பட்ட சிந்தனைகள் அல்ல.
தந்தை பெரியார் தன் குடும்பத்தில் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே மறுமணம் செய்துகாட்டியதில் தொடங்கி, பெண்ணுரிமை பற்றிய சிந்தனைகள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு எப்படி பரிணமித்து வந்திருக்கின்றன என்பதைப் பெரியாரைப் படிப்பவர்கள், படித்தவர்கள் உணர முடியும்.
அதெல்லாம் தெரியாமல், வன்மத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு திரியும் இந்த ஸோம்பிகள், 'தான் திருடி பிறரை நம்பாது’ என்பதைப் போல பெரியார் மீதும் திருட்டுப் பட்டம் சுமத்துகிறார்கள். (ஒரு போட்டோவை வைத்துக் கொண்டே ஒரு மாமாங்கமாக பொழப்பை ஓட்டும் கும்பல் அல்லவா?)
தந்தை பெரியார் தன்னுடைய கருத்தை, அதற்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அதைத் தன்னுடையது என்று சொல்லும் துணிவு கொண்டவர். இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
அதேபோல் தன் சிந்தனைக்கு ஒத்துவரும் அடுத்தவர் கருத்தை வரவேற்று, அதை அவர்கள் பெயரிலேயே வெளியிட்டுப் பரப்பியவர். மேனாட்டு அறிஞர்கள் முதல் தன் பத்திரிகையில் பணியாற்றியவர் வரை அவரவர் பெயரிலேயே குறைந்த விலையில் வெளியிட்டுப் பரப்பிய கொள்கை - அறிவு நாணயத்திற்குச் சொந்தக்காரர்.
இங்கர்சால், ஜீன் மெஸ்லியர், அண்ணல் அம்பேத்கர், பகத்சிங், பாதிரியார் சென்னிகியூ, லெனின், ஜோசப் மெக்காபி, சார்ல்ஸ் டீகோர்ம், மொழிபெயர்ப்பாளர்களான குருசாமி, ஜீவா, எழுத்தாளர்களான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பண்டிதர் இ.மு.சு, என அனைவரின் படைப்புகளையும் பதிப்பாளராக இருந்து வெளியிட்டவர்.
இவர்கள் எடுத்துக்காட்டும் சிந்தனையாளர் பெட்ரண்ட் ரஸலின் மற்றொரு நூலான Why i am not a Christian நூலைத் தமிழில் “நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல?” என்று வெளியிட்டிருக்கிறார். இவர்கள் சொல்கிறபடி காப்பி அடிக்கலாம் என்றால், இதே நூலை ”கிறிஸ்துவ மத ஆராய்ச்சி” என்ற பெயரில் தமிழில் வெளியிட்டுத் தன் பெயரைப் போட்டுக் கொள்ள முடியாதா பெரியாரால்? எத்தனையோ புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்ட பெரியாருக்கு இதை மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன?
ஒன்றா, இரண்டா எத்தனை மொழிபெயர்ப்பு நூல்கள் - அதுவும் பெரும் தொடர்பு வளர்ந்திராத 1920-30களில்! தமிழில் இந்த முற்போக்கு நூல்களெல்லாம் வெளிவந்து அதைப் படித்து தமிழன் உருப்பட்டுவிடமாட்டானா என்ற ஆசைதானே பெரியாருக்கு?
பெரியார் ஒரு சுயசிந்தனையாளர் - Original Thinker. படித்து அறிவை வளர்த்துக் கொண்டவரல்லர்.. கேள்விகளால், பட்டறிவால், பகுத்தறிவால் கூர்மைப்பட்டவர். அந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியதால், தன் வாழ்நாள் முழுக்க நட்டத்தை, எதிர்ப்பைக் கண்டவரே ஒழிய பாராட்டுகளையும், லாபத்தையும் பெற்றவரல்லர்.
சரி, பெண் ஏன் அடிமையானாள் நூலுக்கு வருவோம்.
’கற்பு’ என்ற தமிழ்ச் சொல் பற்றிய ஆய்வுடன் தொடங்குகிறது பெரியாரின் கட்டுரை. அடுத்த கட்டுரை திருக்குறளும் கற்பும் பற்றி விமர்சிக்கிறது.
பெண் ஏன் அடிமையானாள் நூலைப் படித்தவர்களுக்குத் தெரியும், அதன் context முழுக்கவுமே இந்திய/ தமிழகச் சூழல் சார்ந்தது. இதெல்லாம் பெட்ரண்ட் ரஸல் எழுதியதாமா? படித்தால் தானே விளங்கும். படத்தையும், தலைப்பையும் வைத்துக் கதை கட்டினால் எப்படி விளங்கும்?
விரிவாக விலாவாரியாக வரிக்கு வரி இந்த மடையர்களின் உளறல்களை மறுக்கலாம். ஆனால், மிக எளிமையாக ஒரே வாதத்தில் இவர்களின் பொய்யை அம்பலப்படுத்த வேண்டுமா? இதோ சொல்கிறேன்.
பெட்ரண்ட் ரஸலின் Marriages and Morals வெளியிடப்பட்ட ஆண்டு 1929.
’பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரையான கற்பு - 8.1.1928 அன்று வெளியானது. அடுத்த கட்டுரையான வள்ளுவரும் கற்பும் 12.2.1928 அன்று வெளியானது. 7-ஆவதாக இடம்பெற்றுள்ள விதவைகள் நிலைமை பற்றிய கட்டுரை 22.8.1926-இல் வெளியானது. பத்தாவது கட்டுரை 1928 ஆகஸ்டில் வெளியானது.
இப்படி 1926-இல் தொடங்கி 1931 வரை எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு தான் "பெண் ஏன் அடிமையானாள்?” என்னும் நூல்.
உண்மை இப்படி இருக்க, பெட்ரண்ட் ரசலில் நூலைத் தான் அப்படியே தமிழில் மாற்றி எழுதி தன் பெயரைப் போட்டுக் கொண்டார் பெரியார் என்று இந்த புரட்டர்கள், பொய்யர்கள் கூறுகின்றனர் என்றால் எத்தனை கேடுகெட்ட மானமற்ற அயோக்கியர்களுடன் நாம் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்.
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இத்தகைய சிந்தனை மலர்ந்திருக்கிறது பெரியாருக்கும் ரசலுக்கும் என்று ஓர் ஒப்புமையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதியிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணியின் ஒப்புமை அறிவு வளர்ச்சி பற்றிய மகிழ்ச்சி வெளிப்பாடு. அதை வைத்துக் கொண்டு அளந்து கொட்டியிருக்கிறது ஓர் அரைவேக்காடு.
1929இல் வெளியான Marriages and Morals நூலை 1926-லிருந்தே காப்பி அடித்தாரா பெரியார்? இவர்கள் சொல்லும்படி பார்த்தால், ஒரு வேளை புரூப் பார்ப்பதற்காக பெரியாருக்கு அனுப்பிவைத்திருப்பாரோ பெட்ரண்ட் ரசல்? பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமாத்தான் சொல்லுங்களேன்?
கருத்துகள்