கொரோனா காலம் நமக்கு முக்கியமான பாடம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறது.
குறுகிய காலம் - நெடுங்காலம் என்று இரண்டு போக்குகளில் அந்தப் பாடம் நமக்குப் பயன்படும்.
வெள்ளம் சூழும் நேரத்தில் அவசரத்திற்கு, அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக எப்படி வெளியேறுவோமோ, அப்படியான சூழல் தான் இப்போது! செம்பரம்பாக்கத்தம்மன் புண்ணியத்தில் அரிதாக, ஒன்றிரண்டு புயல், வெள்ளக் காலங்களைத் தவிர பேரிடர் கால அனுபவம் நமக்கு மிகவும் குறைவு.
எப்போதும், இதமான, மிதமான கால நிலைகளையும் அனுபவித்து சொகுசு வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாம். அதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, காய் இல்லை, கறி இல்லை, ஃபிரஷ்ஷா கிடைக்கவில்லை என்றெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டிருந்தாலும், அந்த அளவு தான் அரசு ஊற்றும் என்ற சூழல் வந்தாலும், அதில் தாக்குப்பிடிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
முன்பொரு முறை நான் சொன்னது போல, வீடற்ற ஏழைகள் தவிர, மற்றவர்களுக்கு சமாளித்துக் கொள்ளும்படியான சூழல் தான் இப்போது! பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்! ஏரோபிளேனில் குண்டுவீசினால் எப்படி கவனமாக இருப்போமா, அப்படி இருக்க வேண்டிய காலகட்டம். அது இன்னும் ஓரிரு மாதங்கள் தொடரும்.
#நெடுங்_காலப்_பாடம்: அநாவசிய செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக வாழ்வதற்கான தேவை இப்போதும், இனிவரும் காலங்களிலும்! நீங்கள் மனமுவந்து பழகவில்லையென்றால், காலம் காதைத் திருகி கற்றுக் கொடுக்கும்! இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டு, கவனமாக உழைப்பைச் செலுத்தினால் நிச்சயம் முன்னேற முடியும்.
தனிமனித, குடும்பப் பாதுகாப்புக்கு சிக்கனத்தை நாம் பரிந்துரைத்தாலும், பொருளாதாரச் சூழலுக்கு அது ஏற்றதாக இருக்குமா என்பது கேள்விக் குறி.
வாங்காமலே போய்விட்டால் இன்றைய சந்தைப் பொருளாதாரம் சரிந்துபோய்விடும். வாங்கும் சக்தி குறைந்தால் அதுவே பொருளாதார சுழற்சிக்கு அழற்சியாகிவிடும். அடிப்படைத் தேவைகளுக்கான துறைகளில் மட்டும் இன்று நாம் பணிபுரியவில்லை. அவற்றைத் தாண்டிய துறைகள் நிறைய வளர்ந்திருக்கின்றன. அப்படிப் பட்ட துறைகளில் பணியாற்றுவோரும், அதையெட்டிய தொழில்களை நடத்துவோரும் கணிசம் பேர். எனவே, இந்தக் கட்டுமானம் தகர்ந்துவிடாமல் கவனமாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.
#கவனம் - கொரோனா காலத்திலும், அதற்குப் பின்பும்! அவ்வளவுதான் சொல்றதுக்கு இருக்கு!
கருத்துகள்