தகுதி, திறமை என்றால் அவாள் தான் என்பது பார்ப்பனர்களின் வசதிக்காக, பார்ப்பனர்களாலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை. அதிலும், இசை என்றால் அவாள் தான் என்ற மாயையை அவ்வப்போது பலர் உடைத்து வருகிறார்கள். தமிழ்த் திரை என்று மட்டும் இல்லாமல், தமிழிசை, கர்நாடக இசை என்று சாஸ்திரீய சங்கீதத்திலும் கொடி கட்டிப் பறந்தது என்னவோ நம்மவர்கள் தான்.
கே.பி.சுந்தராம்பாளாக இருந்தாலும், வீணை தனம்மாளாக இருந்தாலும், பாகவதராக இருந்தாலும், கற்க வாய்ப்புக் கிடைத்த தமிழர்கள் தங்கள் திறனால் உலகு புகழ வளர்ந்தார்கள். ”எங்களாவாவை கட்டிண்டதாலதான் எம்.எஸ். இப்படி தேனா பாடுறா!” என்ற இங்கிதம் இல்லாத இவர்களின் சங்கீத பீலாக்களை வரலாறு பதிந்துதான் வைத்திருக்கிறது.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாக இதோ நேற்று (17.7.2011) ஓர் இளம் பிஞ்சு, இசைப் பாரம்பரியம் என்றெல்லாம் இல்லாத ஒரு 13 வயது மாணவி 16 மணி நேரம் வீணை வாசித்துச் சாதித்திருக்கிறார். கரூரைச் சேர்ந்த அந்த மாணவியின் பெயர் ஸ்ரீநிதி கார்த்திகேயன். கருவூர் தமிழிசைச் சங்கமும், கருவூர் திருக்குறள் பேரவையும் இணைந்து கரூர், நாரத கானசபாவில் நடத்திய இந்நிகழ்வில் சிறுமி ஸ்ரீநிதியின் இந்தச் சாதனையை ’இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ பதிவு செய்திருக்கிறது. (இந்நிகழ்வை வலையில் நேரலை செய்யும் தொழில்முறைப் பணிக்காக அங்கு செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.)
இந்தச் சாதனை முயற்சியில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், பக்க வாத்தியங்களோடு அவர் வாசித்துக் கொண்டிருந்தாலும், பாடலின் இசை இடைவேளைகளிலும் (பல்லவி - சரணம் இடைவேளை, சரணம் - சரணம் இடைவேளை), ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடலுக்கிடையிலான இடைவேளைகளிலும் கூட ஒரு நொடிக்கு மேலாக வீணை வாசிக்காமல் இருக்கக்கூடாது. விரல்கள் வீணையை மீட்டியபடியே இருக்க வேண்டும்.
அதை மிகத் தெளிவாகவும், அனைவரும் ரசிக்கும் படியும், கர்நாடக சங்கீதப் பாடல்கள், பழைய, புதிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள், பக்திப்பாடல்கள் என மாற்றி மாற்றி வழங்கி அரங்கிலிருந்த அனைவரையும் அசத்தினார் சிறுமி சிறீ நிதி. ’அப்படிப்போடு, அப்படிப் போடு’வும், ‘காதல் வந்தாலே’யும், ‘அச்சம் என்பது மடமையடா’வும், ‘மலர்ந்தும் மலராத’வும், ‘பழமுதிர்ச்சோலையிலே’வும் இன்னும் பலவும் அந்த விரல்கள் மீட்டிய வீணையிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. அதில் இருந்த பலதரப்பட்ட பார்வையாளர்களின் ரசிப்புத் தன்மை என் கருத்தை அதையொட்டிய மற்றொரு திக்கில் செலுத்தியது.
----------------------------------------------------------------------------
ரசனை என்பது புரிதலையும், அறிந்திருத்தலையும் கூட காரணிகளாகக் கொண்டது என்று கருதுகிறேன். நேற்று ஸ்ரீநிதி கார்த்திகேயனின் வீணை இசை நிகழ்ச்சியில் புரியாத பாடல்களை வாசித்ததை விட, சினிமா பாடல்களையும், தெரிந்த பழைய பாடல்களையும் வாசித்த போதுமாணவர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த கைதட்டு அதை உணர்த்தியது.
இதே போக்கை வேறொரு நிகழ்வில், ’அஞ்சாதே ஜீவா’ பாடியபோது டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்துக்கு இருபால் மாணவர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையும், பிற தமிழிசைப் பாடல்களுக்கு பெரியவர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பையும் பார்க்கும் போது உணர முடிந்தது.
இதை வெறுமனே சினிமாப் பாடல்களுக்கான வரவேற்பு என்று கருதி ஒதுக்கிவிட முடியாது. அடிக்கடி கேட்ட பக்திப் பாடல்களோ, விளம்பரங்களோ, மைய நோக்கு இசைகளோ (செம்மொழி மாநாட்டைப் போல) பெரும் வரவேற்பைப் பெறுவதைக் கவனிக்க முடிகிறது. பாடலைக் கேட்கும் போதே உண்டாகும் மகிழ்ச்சி, ’இது எனக்குத் தெரிந்த ஒன்று’ என்பதிலிருந்து முளைக்கிறது.
எனில், ரசனை வளர்ப்பு என்பது மீண்டும் மீண்டும் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலேயே இருக்கிறதோ?
-------------------------------------------------------------------------
வால் துண்டு:
நேற்று நான் கண்ட காட்சிகளில் ஒன்று.
வீணையில் பாடலை வாசிக்கும் போது, அடிக்கடி பாடல் கேட்பவர்களால் உடனே இது எந்தப் பாடல் என்பதை அடையாளம் கண்டுகொள்ள இயலும். ’செல்லாத்தா..’ போன்ற குத்து-பக்திப் பாடல்கள் வாசிக்கப்பட்டு வெகுநேரம் கழித்து, பாடல் ஒன்றை ஸ்ரீநிதி வாசித்துக் கொண்டிருக்கும்போது, எனக்கருகில் அமர்ந்திருந்த காணொளி படத்தொகுப்பாளர் ஒரு திக்கில் கையைக் காட்டினார். கடைசி வரிசையில் இருந்த வெகு ஏழ்மையான பணியாளர்களில் ஒரு அம்மையாருக்கு ’சாமி’ வந்துவிட்டது. இரண்டு பெண்கள் அவரை சமாதானப் படுத்த முயன்றும் முடியவில்லை. விபூதியெல்லாம் வைத்துப் பார்த்தார்கள் வேலைக்காகவில்லை. கடைசியில் அசிங்கமாகிவிடக்கூடாதே என இழுத்துச் சென்றுவிட்டார்கள். இதில் அசிங்கப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா?
அந்த அம்மையாருக்கு சாமி வரவைத்த பாடல் என்ன தெரியுமா?
“சித்தாடை கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு” என்ற பழைய தமிழ் சினிமா பாடல். ஆடுவதற்கு ஏதுவான தாளக்கட்டும், துள்ளல் தரும் இசைக் குறிப்பும், தன்னிலை மறக்கச் செய்யும் கருவிகளின் இசையும் தான் சாமி வரவைக்கின்றன என்று திருவிழா சாமியாடுதலை எத்தனை முறை சொன்னாலும் நம்பாதவர்கள் - நேற்றைய நிலையைப் பார்த்திருந்தால் நம்பக்கூடும்.
கருத்துகள்
ஸ்ரீநிதி, பெயர் அவா மாதிரி இருக்கே ?
ஸ்ரீநிதி அவா மாதிரி இருக்கே ........?
சாதனைச் செல்விக்குப் பாராட்டுகள்!
யூரியூப்பில் பார்க்க வசதியுண்டா?