வடக்கின் வசந்தத்தில் வீரமணியா?
ஸ்ரீலங்கா அரசின் கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பிறகு உலகை ஏமாற்றவும், மீள்கட்டமைப்புப் பணி லாபத்தில் உலகிற்கு பங்கு கொடுக்கவும், உருவாக்கப்பட்டுள்ள வடக்கின் வசந்தம் திட்டத்தை தொடக்கம் முதலே திராவிடர் கழகம் எதிர்த்து வந்திருக்கிறது. போராளிகளுக்கான களமாக, பாசறையாக காடுகள் இருப்பதால் அவற்றையும் அழிக்கும் பணியில் ஈடுபடவுமே இந்தத் திட்டம் என்பதையும் தோலுரித்துவருகிறது.
இந்நிலையில், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், தனது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஒப்பந்தம் போட்டுள்ள எண்ணற்ற நிறுவனங்களில் ஒன்றான CIDC -யும், வடக்கின் வசந்தம் திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது என்ற செய்தி வெளியானது. எந்தக் காலத்திலும் தமிழர்களின் நலனுக்கு எதிரான எதனையும் எதிர்க்கத் தயங்காதது திராவிடர் கழகமும், அதன் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்களும் ஆவார்கள்.
ஆனால் எதை வைத்து இவரை குறை சொல்ல முடியும் என்ற கண்கொண்டு அலையும் கும்பலுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லையே... இதோ கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி "விடுதலை" ஞாயிறு மலரில் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழர் தலைவர் கி.வீரமணி. குதர்க்கம் மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களுக்காக அல்ல.... உண்மையான அக்கறையுடையோருக்காக இங்கே அந்தக் கேள்வி பதிலை அப்படியே தருகிறோம். படித்துத் தெளியட்டும்!

கேள்வி: இலங்கையில் வடக்கில் வசந்தம் திட்டத்தில் உள்ள இந்தியக் கட்டுமானக் குழுமத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா?- தஞ்சை சேகரன்பதில்: பொதுவான இந்திய தொழில் தேசிய கட்டுமான அமைப்பில் நாடு தழுவிய அளவில் பல நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் (சிவில் கட்டடப் பணிகளுக்குப் பயிற்சி தருவதற்கு) புரிந்-துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதில் நமது பெரியார் _ மணியம்மை பல்கலைக் கழகமும் ஒன்று.வடக்கில் வசந்தம் என்ற திட்டத்தினை இந்தியக் கட்டுமானக் குழுமம் செய்ய உள்ளது என்பதை அறிந்த நிலையிலேயே நமது துணைவேந்தர், இலங்கையில் தற்போதுள்ள தமிழர்களின் பரிதாப நிலையில், எங்கள் நிறுவனம் பங்கேற்க இயலாது; என்று திட்டவட்டமான பதிலை அந்த குழுமத் தலை-வருக்கே பல நாள்களுக்குமுன்பே அனுப்பி விட்-டார்கள். உலகின் பற்பல நாடுகளிலிருந்து கட்டுமானம் செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அது என்றாலும்-கூட இலங்கைத் திட்டத்தில் பெரியார் - _ மணியம்மை பல்கலைக் கழகம் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.கனவில்கூட ஈழத் தமிழருக்கு எதிரான நிலையை எடுத்திடுமா நமது அமைப்புகள்?
குறிப்பு: ஈரோட்டுக் கண்ணாடி என்பது கூர்ந்த அறிவின் அடையாளம்; நுண்ணோக்குதலுக்கான ஒப்பீடு...
ஈரோட்டில் ஏதோ ஒரு ஆப்டிகல் கடையில் வாங்கி அணியும் கண்ணாடியல்ல... பெயர் வைத்துக் கொள்வது பெரிதல்ல... அதற்கான குறைந்தபட்ச அறிவும், அறிவு நாணயமும் வேண்டும். ஆசிரியர் அவர்களைக் குறைகூறுவதற்கென்றே, வசை பாடுவதற்கென்றே, ஆபாச சொல்லாடல்களால் அர்ச்சனை செய்வதற்கென்றே பிளாக்ஸ்பாட் நடத்துவோருக்கெல்லாம் 'ஈரோட்டுக் கண்ணாடி' என்று சொல்வதற்கு அருகதையே கிடையாது.


