Wednesday, July 22, 2009

கிரகண நேரத்தில் கேசரி!

எங்கே என்ன நடந்தாலும் அதில் தங்களுக்கென துண்டைப் போட்டு சீட்டைப் ப்டிப்பதில் மூட நம்பிக்கை வியாபாரிகளுக்கு நிகர் யாரும் கிடையாது. உலகக்கோப்பை கிரிக்கெட் ஆனாலும் சரி, உலகே வியந்து பார்க்கும் கிரகணம் ஆனாலும் சரி... தங்களது கடையை விரித்து மக்களின் பயத்தை மூலதனமாக்கி, தங்களின் மூடநம்பிக்கைச் சரக்கை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். உடனடி லாபம் என்றெல்லாம் கூட இல்லை... இதன் மூலம் விதைத்துவிட்டால் வேறெங்காவது கூட அறுவடை செய்து கொள்ளலாம்.

இது தான் சாக்கென்று கிரகணத்தையொட்டி சுனாமி வரும். பினாமி வரும் என்று பீதியை வேறு கிளப்பி விடுகிறார்கள். சுனாமி வருவதற்கு என்ன காரணம் என்று கூட இந்தப் பன்னாடைகளுக்குத் தெரிவதில்லை. சரியாக இந்த நேரத்தில் டெக்டானிக் பிளேட் நகருமாம். அடங்கொய்யால...!

சரி, அத்தோடு விட்டார்களா... ஒரே நேரத்தில் ஆற்றில் இறங்கி புண்ணியம் தேடப்போய் இரண்டு பேரைப் பிணமாக்கியதுதான் மிச்சம்.

கிரகண நேரத்தில் சாப்பிடக் கூடாது என்றொரு மூடநம்பிக்கை வேறு! அடக் கொடுமையே.... சாப்பிடறதுக்கும் கிரகணத்துக்கும் என்னப்பா தொடர்பு!

ராகு சூரியனைச் சாப்பிடுதுன்னு கதை கட்டியிருக்கான்னா... நான் ரவா கேசரி சாப்பிடுறதுக்குமா ஒரு கதை!

எல்லா மூடநம்பிக்கைகளையும் முறியடிப்பதற்கு களம் காணும் திராவிடர்கழகம், இந்த மூட நம்பிக்கையை பொய்யென்று நிறுவ ஒரு களம் அமைத்தது. அட்றா சக்கை... சென்னை பெரியார் திடலிலும், திருச்சி, தஞ்சை, ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும், வடலூர் உள்ளிட்ட ஊர்களில் திராவிடர் கழகத்தின் சார்பிலும் 'உண்ணும் விரதம்' என்று வேடிக்கையாக பெயரிட்டு, காலையில் நல்லதொரு சிற்றுண்டியையும் ஏற்பாடு செய்தது.




கலைஞர் தொலைக்காட்சி, NDTV, News 9X உள்ளிட்ட எண்ணற்ற தொலைக்காட்சிகள் குவிந்துவிட, சிற்றுண்டி அருந்தியவாறே ஆசிரியர் அய்யா அவர்கள் பேட்டி கொடுக்க... இத்தனை நாள் "walk the talk" எடுத்துக் கொண்டிருந்த NDTV, நேற்று "Eat the Talk" எடுத்தது.

நானும் எனக்குப் பிடித்த கேசரியை இரண்டு கரண்டியை அதிகமாக வாங்கிக் கொண்டு விரைந்து சிற்றுண்டியை முடித்துவிட்டு, தோழர்களோடு சென்று சென்னை கடற்கரையில் துண்டறிக்கையை விநியோகித்தோம்.

அதுசரி, அதை ஏன்டா ஒரு நாள் கழிச்சு எழுதுற... கேசரி சாப்பிட்டதை நேற்றே எழுதிட வேண்டியதுதானேங்கிறீங்களா... சாப்பிட்டா மட்டும் போதுமா? ஒன்னும் பிரச்சினையில்லைன்னு சொல்ல வேண்டாமா? அதான் இன்று காலையில எல்லாம் சுபமா முடிஞ்சது பதிவு போடுறேன்...!


Related Posts with Thumbnails